இந்துத்துவம் பெயரில் வஞ்சிக்கப்பட்டோம் என உத்தவ் தாக்கரே கூறியதாக பரவும் போலிச் செய்தி !
பரவிய செய்தி
இந்துத்துவம் என்கிற பெயரால் வஞ்சிக்கப்பட்டோம். பாலா சாகிப் தாக்கரே இந்துத்துவம் என்கிற மத அடையாளத்தை மறுத்து மராட்டியர் என்கிற இன அடையாளத்தை முன்னெடுத்து இருந்தால் இன்று நாக்பூர் பிராமணர்களால் வந்சிக்கப்பட்டிருக்கமாட்டோம்.- சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே.
மதிப்பீடு
விளக்கம்
மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியின் அதிருப்தி எம்எல்ஏ-க்கள் போர் கொடித் தூக்கியதன் காரணமாக ஆட்சிப் பெரும்பான்மையை இழந்து முதல்வர் பதவியை உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்தார். இதனால் பாஜக மற்றும் சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் இணைந்து புதிய முதல்வராக சிவசேனா கட்சியின் ஏக்நாத் ஷிண்டே தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
இந்நிலையில், இந்துத்துவம் என்கிற பெயரால் வஞ்சிக்கப்பட்டோம் என முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியதாக ஜூனியர் விகடன் நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உண்மை என்ன ?
இதுகுறித்து ஜூனியர் விகடன் முகநூல் பக்கத்தில் தேடிய போது, ஜூன் 29-ம் தேதி உத்தவ் தாக்கரே முதல்வர் பதவியை ராஜினாமா செய்தது தொடர்பான செய்தியே வெளியாகி இருக்கிறது.
மேற்காணும் நியூஸ் கார்டில் போலியான செய்தியை எடிட் செய்து சமூக வலைதளங்களில் வைரல் செய்து வருகிறார்கள். இந்த போலியான நியூஸ் கார்டை நாங்கள் வெளியிடவில்லை என ஜூனியர் விகடனும் மறுப்பு தெரிவித்து பதிவிட்டு உள்ளது.
முடிவு :
நம் தேடலில், இந்துத்துவம் என்கிற பெயரால் வஞ்சிக்கப்பட்டோம். பாலா சாகிப் தாக்கரே இந்துத்துவம் என்கிற மத அடையாளத்தை மறுத்து மராட்டியர் என்கிற இன அடையாளத்தை முன்னெடுத்து இருந்தால் இன்று நாக்பூர் பிராமணர்களால் வந்சிக்கப்பட்டிருக்கமாட்டோம் என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூறியதாகப் பரப்பப்படும் நியூஸ் கார்டு போலியாக எடிட் செய்யப்பட்டது என அறிய முடிகிறது.