கிருத்திகா உதயநிதியின் வங்கி கணக்குகள் முடக்கம் எனத் தவறான செய்தியைப் பரப்பிய சாட்டை துரைமுருகன் !

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
கடந்த சில நாட்களுக்கு முன்பு அமலாக்கத்துறை கல்லல் குழுமம் மற்றும் உதயநிதி அறக்கட்டளை தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தியது. இதைத் தொடர்ந்து அமலாக்கத்துறை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த சோதனை தொடர்பாக முடக்கப்பட்ட சொத்துவிபரங்கள் குறித்து பதிவிட்டிருந்தது.
இந்நிலையில் “தமிழ்நாட்டோட விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களோட மனைவி கிருத்திகா உதயநிதிக்கு சொந்தமான 35 கோடி அசையா சொத்துகள் முடக்கப்பட்டிருக்கிறது. அதே போல உதயநிதி பவுண்டேசன் என்கிற அவருடைய கணக்கில் 35 லட்சம் ரூபாய் பணம் முடக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் இதற்கு கிருத்திகா உதயநிதி “இது பொய்யான செய்தி, இந்த செய்தியைப் பரப்புபவர்கள் நல்ல புகைப்படத்துடன் பரப்புங்கள் என்று கூறியுள்ளார். ஆனால் அமலாக்கத்துறை பொய்யான செய்தி பரப்புவதற்கு வாய்ப்பே இல்லை. அமலாக்கத்துறை பொய் சொன்னால் அதன் மீது உதயநிதி வழக்கே போடலாம். மேலும் அமலாக்கத்துறை சாதாரணமாக ஒருவர் மீது வழக்கு போட மாட்டார்கள். அங்கு ஆதாரம் இருக்க வேண்டும். தகவல் இருக்க வேண்டும். உறுதிப்படுத்தப்பட்ட பின்பு தான் அமலாக்கத்துறை இவ்வாறு கை வைக்கும்.” எனக் கூறி சாட்டை துரைமுருகன் தனது யூடியூப் சேனலில் இன்று வீடியோ வெளியிட்டிருந்ததை காண முடிந்தது.
உண்மை என்ன ?
பரவி வரும் வீடியோ குறித்து அமலாக்கத்துறையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஆய்வு செய்து பார்த்ததில், அதில் “கல்லால் குரூப் மற்றும் பிறர் தொடர்பான வழக்கில் 25/5/2023 அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள ரூ36.3 கோடி மதிப்பிலான பல்வேறு அசையா சொத்துக்களை ED தற்காலிகமாக இணைத்துள்ளது மற்றும் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையின் வங்கிக் கணக்கில் உள்ள ரூ34.7 லட்சமும் இணைக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளதை காண முடிந்தது.
ED has provisionally attached various immovable properties across Tamil Nadu, on 25/5/2023 valued at Rs. 36.3 Crore and further attached Rs. 34.7 lakh available in the bank account of M/s Udayanidhi Stalin Foundation in the case of Kallal Group and others.
— ED (@dir_ed) May 27, 2023
தி ஹிந்து மே 27, 2023 அன்று வெளியிட்டுள்ள கட்டுரையில்,”மத்திய குற்றப்பிரிவு பதிவு செய்த எஃப்ஐஆர் அடிப்படையில் ED விசாரணையைத் தொடங்கியது. அதன்படி லைகா குழுமத்தின் ₹300 கோடி மோசடி மற்றும் கல்லல் குழுமம் மீதான தொடர்பான வழக்கில், தமிழ்நாடு முழுவதிலும் மொத்தமாக ₹36.3 கோடி மதிப்பிலான அசையா சொத்துகளையும், மேலும் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையின் வங்கிக் கணக்கில் உள்ள ₹34.7 லட்சத்தையும் அமலாக்க துறை தற்காலிகமாக முடக்கி உள்ளது ” என்றுள்ளது.
இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையின் அறங்காவலர் பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில், “உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்கு முறையாக அரசு அங்கீகாரம் பெறப்பட்டுள்ளதாகவும், வரவு – செலவு கணக்குகளை முறையாக வருமான வரித்துறையிடம் தாக்கல் செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
அமலாக்கத்துறை குறிப்பிட்டுள்ள 36 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துகள் முடக்கத்திற்கும் அறக்கட்டளைக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும், உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்கு எந்த அசையா சொத்தும் இல்லை ” எனவும் குறிப்பிட்டுள்ளார்.”
இதன் மூலம் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்கு எந்தவித அசையா சொத்துகளும் கிடையாது என்பதையும், உதயநிதி அறக்கட்டளை என்று அமலாக்கத்துறை குறிப்பிட்டிருந்ததை, கிருத்திகா உதயநிதி ஸ்டாலினின் தனிப்பட்ட சொந்த கணக்கிலிருந்து அமலாக்கத்துறை முடக்கியதாக தவறாகப் பரப்பினர் என்பதையும் அறிய முடிகிறது.
முடிவு:
நம் தேடலில், அமலாக்கத்துறையால் கிருத்திகா உதயநிதியின் வங்கி கணக்குகள் முடக்கம் என்று சாட்டை துரைமுருகன் வீடியோவில் பேசியுள்ள தகவல்கள் தவறானவை என்பதை அறிய முடிகிறது.