தனிப்பட்ட முறையிலேயே பங்கேற்றேன், அமைச்சராக இல்லை என சனாதன வழக்கு மனுவில் உதயநிதி கூறியதாக அண்ணாமலை பரப்பும் பொய் !

பரவிய செய்தி

“திமுக அரசின் அமைச்சராக இருந்து சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட அவர், இன்று நீதிமன்றத்தில் சமர்பித்த பதில் மனுவில் மாநில அரசின் அமைச்சராக அல்லாமல் தனிப்பட்ட முறையில் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தல் வரும்போது, ​​திமுக தனது சித்தாந்தத்தை புதைத்துவிட்டு நாடகத்தை  தொடங்குகிறது.” – தமிழ்நாடு பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை.

Twitter Link | Archive Link

மதிப்பீடு

விளக்கம்

கடந்த செப்டம்பர் 02 அன்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் ‘சனாதன ஒழிப்பு மாநாடு’ என்ற பெயரில் ஒரு மாநாடு நடத்தப்பட்டது. அதில் பேசிய தமிழ்நாடு இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “இந்த மாநாட்டின் தலைப்பே மிகவும் சிறப்பாக அமைந்திருக்கின்றது. ‘சனாதன எதிர்ப்பு மாநாடு’ என்று போடாமல் ‘சனாதன ஒழிப்பு மாநாடு’ என்று நீங்கள் போட்டிருக்கிறீர்கள்.

அதற்கு என்னுடைய வாழ்த்துகள். சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். சனாதனம் என்பதை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம்.” என்று குறிப்பிட்டு பேசியிருந்தார்.

இந்நிலையில், இம்மாநாட்டில் உதயநிதியோடு சேர்ந்து திமுக எம்.பி ஆ.ராசாவும் பேசினார். அமைச்சர் பி.கே.சேகர் பாபுவும் இந்த மாநாட்டில் கலந்துகொண்டார். எனவே இவர்கள் மூவரும் எந்த தகுதியின் அடிப்படையில் மக்கள் பிரதிநிதிகளாக பதவியில் நீடித்து வருகின்றனர் என்பதை விளக்கக் கோரி இந்து முன்னணி நிர்வாகிகளான கிஷோர்குமார், ஜெயக்குமார் மற்றும் மனோகர் உள்ளிட்ட மூவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் கோ-வாரண்டோ மனுக்களை (வழக்கு எண்: WP 29205 of 2023) தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்குகள் நீதிபதி அனிதா சுமந்த் முன்னிலையில் கடந்த அக்டோபர் 11 அன்று முதல் விசாரணைக்கு வந்தது. அதில் இந்து முன்னணி நிர்வாகிகள் மூவர் சார்பில் முதல் விசாரணை நடைபெற்ற நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது உதயநிதி தரப்பிலும், சட்டப்பேரவைச் செயலர் தரப்பிலும் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டு உதயநிதி தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி பேசினார்.

இந்நிலையில் இந்த விசாரணை தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள அண்ணாமலை, “திமுக அரசின் அமைச்சராக இருந்து சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட அவர், இன்று நீதிமன்றத்தில் சமர்பித்த பதில் மனுவில் மாநில அரசின் அமைச்சராக அல்லாமல் தனிப்பட்ட முறையில் தான் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதாக குறிப்பிட்டுள்ளார். தேர்தல் வரும்போது, ​​திமுக தனது சித்தாந்தத்தை புதைத்துவிட்டு நாடகத்தை தொடங்குகிறது.” என்று குறிப்பிட்டுள்ளார். 

Archive Link:

உண்மை என்ன?

பரவி வரும் செய்திகளின் உண்மைத் தன்மையை அறிய, உதயநிதி தரப்பிலும், சட்டப்பேரவைச் செயலர் தரப்பிலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவை (affidavit) ஆய்வு செய்து பார்த்தோம்.

அதில், “சமீபத்திய செய்தி அறிக்கைகளின்படி பார்த்தால், 78 ஒன்றிய அமைச்சர்களில் 33 பேர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவற்றில் 4 ஒன்றிய அமைச்சர்கள் மீது கொலை செய்ததாகவும், கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் வழக்குகள் உள்ளன. மத நூல்கள் மீது வெளிப்படுத்தும் தனிப்பட்ட பார்வைகளை (அ) கருத்துகளைக் காட்டிலும் இவை கடுமையான குற்றச்சாட்டுகள் ஆகும். இந்த வழக்குகள் அனைத்தும் நீதிமன்ற விசாரணையில் பல்வேறு நிலைகளில் உள்ளன. இவர்கள் மீதெல்லாம் கோ-வாரண்டோ வழங்கப்பட்டால் மோசமான சூழ்நிலையை உருவாக்கும்.” என்று வரிசை எண் 24-இல் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் அந்த மனுவில், “ஒருவருக்கு ஒரு பிரச்சினையில் தனக்கென ஒரு பார்வை உள்ளது என்பதற்காகவே அவரை அமைச்சர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய முடியாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கு மாறாக கூறுவது, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 19(1)(a) பிரிவின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள, குடிமகனின் பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கக்கூடியது. பிரிவு 19(1)(a) மீதான கட்டுப்பாடுகள் என்பது பிரிவு 19(2) இன் கீழ் மட்டுமே இருக்க முடியும். மாறாக, ஹிந்துக் கல்லூரியால் (Hindu College) வெளியிடப்பட்ட புத்தகத்தில் இருக்க முடியாது. அது பிரிவு 13-ன் கீழ் உள்ள சட்டமும் அல்ல.” என்றும் வரிசை எண் 26-இல் குறிப்பிடப்பட்டிருந்தது. 

ஆனால் பதில் மனுவின் எந்த இடத்திலும் அண்ணாமலை கூறியது போல குறிப்பிடப்படவில்லை.

மேலும் படிக்க: முத்துராமலிங்கத் தேவர் அண்ணாவை மன்னிப்பு கேட்க வைத்ததாக அண்ணாமலை பேசிய பொய் !

மேலும் படிக்க: முதுநிலை மருத்துவ இடங்கள் குறித்து அண்ணாமலை சொன்ன பொய்கள் !

முடிவு:

நம் தேடலில், நீதிமன்றத்தில் அமைச்சர் உதயநிதி அளித்த பதில் மனுவில் மாநில அரசின் அமைச்சராக அல்லாமல் தனிப்பட்ட முறையில் தான் சனாதன ஒழிப்பு மாநாடு நிகழ்ச்சியில் பங்கேற்றதாக  குறிப்பிடப்பட்டிருப்பதாக அண்ணாமலை கூறிய தகவல்கள் தவறானவை என்பதை அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Krishnaveni S

Krishnaveni, working as a Sub-Editor in You Turn. Completed her Master's in History from Madras University. Along with that, she holds a Bachelor’s degree in Electrical Engineering and also in Tamil Literature. She was a former employee of an IT Company and now she currently finds fake news on social media to verify factual accuracy.
Back to top button
loader