விழிப்புணர்விற்காகப் பதிவிட்ட உ.பி வீடியோவை தமிழ்நாடு எனப் பரப்பும் பாஜகவினர் !
பரவிய செய்தி
வாகனங்களை பொதுமக்கள் பாத்து நிறுத்தணுமாம்! – தமிழக காவல் துறை.
மெயின் ஏரியாவில் ஒரு வண்டியே உள்ள முழகும் அளவுக்கு பள்ளம் தோண்டி மூடாமல் விட்டுள்ள கார்பொரேஷன் அதிகாரிகள் மீது வழக்கு போட்டு உள்ள தள்ளாமால் கைலகாத்தனமாக செயல் படும் tnpoliceoffl
மதிப்பீடு
விளக்கம்
வாகனத்தில் சென்று கொண்டிருந்த இருவர் சாலை ஓரத்தில் இருந்த பள்ளத்தில் விழும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அந்த வீடியோவின் கீழே “மழை நேரங்களில் வாகனங்களை நிறுத்தும்போது கவனமாக இருக்கவும். தண்ணீரில் சாலையில் உள்ள பள்ளம் தெரியாது. மக்கள் நலனில் விருதுநகர் மாவட்ட காவல்துறை” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Twitter link | Archive twitter link
இந்த வீடியோவினை திருவள்ளூர் மேற்கு பாஜக தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில், இந்நேரத்தில் திமுக அரசைக் குறை சொல்லி பயன் இல்லை. திருடுவதற்காகவே ஆட்சிக்கு வந்த கட்சி. மழைக் காலம் மக்கள் தான் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் எனப் பதிவிட்டுள்ளது. இதனை பாஜகவின் வினோஜ் செல்வம் ரீடிவீட் செய்துள்ளார்.
வாகனங்களை பொதுமக்கள் பாத்து நிறுத்தணுமாம்! – தமிழக காவல் துறை.
மெயின் ஏரியாவில் ஒரு வண்டியே உள்ள முழகும் அளவுக்கு பள்ளம் தோண்டி மூடாமல் விட்டுள்ள கார்பொரேஷன் அதிகாரிகள் மீது வழக்கு போட்டு உள்ள தள்ளாமால் கைலகாத்தனமாக செயல் படும் @tnpoliceoffl 😡😡😡 pic.twitter.com/hv7Z4pt9Nm
— Johny Bhai(மோடியின் குடும்பம்)🇮🇳 (@Johni_raja) November 12, 2022
இதேபோல், ஜானி ராஜா என்பவர், வாகனம் முழுகும் அளவிற்கு ஒரு முக்கிய பகுதியில் பள்ளம் தோண்டி மூடாமல் இருந்த கார்பொரேஷன் அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யாமல் இருக்கிறது எனத் தமிழ்நாடு காவல் துறையின் டிவிட்டர் பக்கத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
உண்மை என்ன ?
சென்னையில் மழைநீர் வடிகால் பணிக்காகத் தோண்டப்பட்ட பள்ளத்தின் அருகே சரியான முறையில் தடுப்புகள் அமைக்காத நிலையில், புதிய தலைமுறை உதவி ஆசிரியர் முத்துக்கிருஷ்ணன் கடந்த மாதம் பள்ளத்தில் விழுந்து உயிர் இழந்தார். இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்கத் தமிழ்நாடு அரசு தரப்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மழை நேரங்களில் தண்ணீர் நிறைந்து இருக்கும் பள்ளங்கள் தெரிவதில்லை விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. வாகனங்களை நிறுத்தும்போது கவனமாக இருக்கவும்.#virudhunagar #SouthZoneTNpol #TNPolice #TruthAloneTriumphs pic.twitter.com/zuuiiCaHFs
— virudhunagar district police (@Vnr_Police) November 6, 2022
Archive twitter link
தற்போது இரண்டு பேர் வாகனத்தில் செல்லும் போது பள்ளத்தில் விழும் வீடியோவில் விருதுநகர் மாவட்ட காவல்துறை என இருப்பதைக் காண முடிகிறது. எனவே அவர்களது டிவிட்டர் பக்கத்தில் தேடினோம். அப்பக்கத்தில் 2022, நவம்பர் 6ம் தேதி அந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ளது.
அதில், “மழை நேரங்களில் தண்ணீர் நிறைந்து இருக்கும் பள்ளங்கள் தெரிவதில்லை விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. வாகனங்களை நிறுத்தும்போது கவனமாக இருக்கவும்” என விழிப்புணர்வுக்காகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவ்வீடியோவில் இந்தி எழுத்துக்கள் இருப்பதினை காண முடிகிறது. மேலும், இச்சம்பவம் எந்த பகுதியில் நடந்தது எனக் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் மூலமாக இணையத்தில் தேடினோம்.
Visuals from UP's Aligarh.
Leaving this here. pic.twitter.com/bOhACL96IW
— Piyush Rai (@Benarasiyaa) June 18, 2022
பியூஷ் ராஜ் என்ற பத்திரிகையாளர் தனது டிவிட்டர் பக்கத்தில் 2022, ஜூன் 18ம் தேதி இந்த வீடியோவினை பதிவிட்டுள்ளார். அதில், இச்சம்பவம் உத்தரப் பிரதேசம் மாநிலம், அலிகர் மாவட்டத்தில் நிகழ்ந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பள்ளத்தில் விழுந்தது ஒரு காவலர் என்றும் குறிப்பிட்டுள்ளார். காவலரும் அவரது மனைவியும் மருத்துவரைச் சந்தித்துவிட்டுத் திரும்புகையில் இச்சம்பவம் நிகழ்ந்தது எனப் பதிவிடப்பட்டுள்ளது.
காவலரின் மனைவி செய்தியாளரிடம் பேசுகையில், இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்கையில் அலிகரை எப்படி ஸ்மார்ட் சிட்டி எனக் கூறுவீர்கள் என்றும், தனக்கு உள்காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இச்சம்பவம் குறித்து 2022, ஜூன் 19ம் தேதி இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது. அதே தேதியில் Times Now தனது youtube பக்கத்தில் ‘Couple On Scooter Falls Into Water-Filled Ditch In Aligarh’ என்ற தலைப்பில் வீடியோ பதிவிட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் நடந்த இந்நிகழ்வின் வீடியோவினையே விருதுநகர் காவல் துறை விழிப்புணர்விற்காகப் பதிவிட்டுள்ளனர். இதே போன்று, கேரள சிறுவன் பேருந்து விபத்திலிருந்து தப்பித்த சிசிடிவி காட்சியினையும் “குழந்தைகளை சாலைகளில் தனியாகச் சைக்கிள் ஓட்ட அனுமதிக்காதீர்கள். விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது” என விருதுநகர் காவல்துறை டிவிட்டர் பக்கத்தில் விழிப்புணர்விற்காகப் பதிவிட்டுள்ளனர்.
குழந்தைகளை சாலைகளில் தனியாக சைக்கிள் ஓட்ட அனுமதிக்காதீர்கள்.#virudhunagar #SouthZoneTNpol #TNPolice #TruthAloneTriumphs pic.twitter.com/0FG8w6Gamv
— virudhunagar district police (@Vnr_Police) October 31, 2022
முடிவு :
நம் தேடலில், வாகனத்தில் செல்லும் இரண்டு பேர் சாலை ஓரம் உள்ள பள்ளத்தில் விழும் வீடியோ உத்தரப் பிரதேச மாநில, அலிகரில் நிகழ்ந்ததாகும். அதனை விழிப்புணர்வு ஏற்படுத்தவே விருதுநகர் காவல்துறையினர் பதிவிட்டுள்ளதை அறிய முடிகிறது.