உபி-யில் கிணற்றில் தண்ணீர் எடுத்த பட்டியலினப் பெண் தாக்கப்பட்ட வீடியோவா ?
பரவிய செய்தி
உபியில் கிணற்றில் தண்ணீர் எடுத்ததற்காக தலித் இளம் பெண் இப் படி அடித்து மானபங்கம் செய்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். பாவிகளுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்.
மதிப்பீடு
விளக்கம்
உத்தரப் பிரதேச மாநிலத்தில் பொது கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்த பட்டியலினப் பெண்ணை கடுமையாக அடித்து, உடைகளை கிழித்து மானபங்கம் செய்வதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரல் செய்யப்படும் வீடியோ மற்றும் தகவலின் உண்மைத்தன்மையை அறிந்து கொள்ள தீர்மானித்தோம்.
உண்மை என்ன ?
பட்டியலினப் பெண் தாக்கப்பட்டதாக கீ வார்த்தைகளைக் கொண்டு தேடிய பொழுது சமீபத்திய செய்திகளோ, வீடியோ தகவல்களோ கிடைக்கவில்லை. பெண் தாக்கப்பட்டது தொடர்பாக மேற்கொண்டு தேடிய பொழுது, வைரல் வீடியோ குஜராத்தைச் சேர்ந்தது என செய்திகள் கிடைத்தன.
குஜராத் மாநிலத்தின் சோட்டா உதய்பூர் பகுதியில் 17 வயது பெண் காதலித்த காரணத்திற்காக தந்தை கண் முன்னே கடுமையாக தாக்கப்பட்டு உள்ளதாக வெளியாகி இருக்கிறது. 20 வயது இளைஞனும், அந்த பெண்ணும் யாருக்கும் தெரியாமல் ஊரை விட்டு மத்தியப் பிரதேசத்திற்கு சென்றுள்ளனர். ஆனால், அவர்கள் இருவரையும் பிடித்து கிராமத்திற்கே மீண்டும் கொண்டு வந்து கடுமையாக தாக்கியுள்ளார்கள். தாக்கியவர்கள் அப்பெண்ணின் குடும்பத்தினர் என்றேக் கூறப்படுகிறது.
அந்த பெண்ணை தாக்கியதோடு மட்டுமல்லாமல் காதலனை அப்பெண்ணின் இடது தோள்பட்டையில் அமர வைத்து நடக்க வைத்ததாக மே 31-ம் தேதி டைம்ஸ் ஆப் இந்தியா செய்தியில் வெளியாகி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், மைனர் பெண்ணை கடத்திச் சென்றதாக அந்த இளைஞரின் மீதும் போலீசார் வழக்கு பதிவுச் செய்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
வைரலான வீடியோவிற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தன் ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்து மே 30-ம் தேதி பதிவிட்டு உள்ளார்.
The violence in this video is not isolated. It’s an expression of what many Indian women have always faced. The violence comes in many forms & is sustained by a culture that glorifies symbols of womanhood while simultaneously treating women with total contempt & disrespect. pic.twitter.com/5KXrJvGPDj
— Rahul Gandhi (@RahulGandhi) May 30, 2020
முடிவு :
நம்முடைய தேடலில், உத்தரப் பிரதேசத்தில் கிணற்றில் தண்ணீர் எடுத்தக் காரணத்திற்காக பட்டியலினப் பெண்ணை வேறு சாதியினர் தாக்கியதாக வைரலாகும் வீடியோ தவறானது. காதலனுடன் மத்தியப் பிரதேசத்திற்கு ஓடிய குஜராத் பெண்ணை தாக்கிய சம்பவமே தவறாக பரப்பப்பட்டு வருகிறது. தவறான வீடியோக்களை பகிர வேண்டாம்.