ராமநவமி ஊர்வலத்தில் கல்லெறியத் திட்டமிட்டிருந்ததைக் காவல் துறை கண்டறிந்ததாகப் பரவும் தவறான தகவல்!

பரவிய செய்தி

ராஞ்சியில் நாளை ராமநவமி ஊர்வலத்தில் கல்லெறிய 10 வீடுகளின் மொட்டை மாடியில் கல் குவிக்கப்பட்டதை போலீஸ் ட்ரோன் மூலம் கண்டு பிடித்தனர்.

X link

மதிப்பீடு

விளக்கம்

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் ராமநவமி ஊர்வலத்தை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளைக் காவல் துறை செய்து வந்தது. அப்படி ஊர்வலம் நடைபெறும் வழிகளை ட்ரோன் மூலம் பார்வையிட்ட காவல் துறை 10 வீட்டு மொட்டை மாடியில் ஊர்வலத்தில் கல் எறிவதற்காக வைக்கப்பட்டிருந்த கற்குவியலைக் கண்டறிந்ததாக வீடியோ ஒன்று வலது சாரிகளால் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது. இதே தகவலுடன் ’மீடியான்’ என்னும் தளமும் செய்தி வெளியிட்டுள்ளது. 

உண்மை என்ன?

பரவக் கூடிய வீடியோ குறித்து சமூக வலைத்தள பக்கங்களில் தேடியதில், இதே வீடியோவை ’Megh Updates’ என்னும் எக்ஸ் பக்கத்தில் நேற்றைய தினம் பதிவிட்டிருந்ததைக் காண முடிந்தது. அதிலும், ’ராம நவமியில் நடக்க இருந்த வகுப்புவாத வன்முறையை ராஞ்சி காவல் துறை முறியடித்தது’ என்றுதான் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த எக்ஸ் பக்கம் பல போலி செய்திகளை இதற்கு முன்னர் பரப்பியுள்ளதால் இந்த தகவல் நம்பும்படியாக இல்லை.

எனவே மேற்கொண்டு தேடியதில், ’Megh Updates-ன்’ பதிவு குறித்து ஒருவர் கேட்டிருந்த கேள்விக்கு ராஞ்சி காவல் துறை எக்ஸ் பக்கத்தில் பதிலளித்திருந்ததையும் காண நேர்ந்தது. 

X link

அதில், ஊர்வலப் பாதைகளை ட்ரோன் மூலம் கண்காணிப்பது ஒரு பொதுவான நிர்வாக நடைமுறைதான். இந்நடைமுறை பல மாவட்டங்களில் செய்யப்படுகிறது. அப்படிக் கண்காணிக்கும் போது கல், செங்கல் எனக் கட்டுமானம் தொடர்பான பொருட்கள் இருந்தால் அதனை அப்புறப்படுத்த உரிமையாளரிடம் அறிவுறுத்துகிறோம் எனக் கூறப்பட்டுள்ளது. 

மேலும் ராஞ்சி காவல்துறையின் மற்றொரு பதிவில் இதே தகவலுடன், இந்நடைமுறைக்கு மத ரீதியான பின்புலமோ சதி செயல்களோ காரணம் இல்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஊர்வலத்தையொட்டி காவல் துறை மேற்கொள்ளும் பணியினை மத பின்னணியுடன் ஒரு தவறான தகவலை சமூக வலைத்தளத்தில் பரப்புகின்றனர். 

கடந்த ஆண்டு பீகார், மேற்கு வங்கம், மகாராஷ்டிராவில் நடந்த ராம் நவமி ஊர்வலத்தில் கவரங்கள் ஏற்பட்ட சம்பவங்களும் நடந்துள்ளது. அப்போது கலவரம் காரணமாக இந்துக்கள் வெளியேறுவதாகப் போலி வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டது. அதனை யாரும் நம்ப வேண்டாம் எனப் பீகார் காவல் துறை தரப்பில் அப்போது விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது. 

முடிவு : 

ராஞ்சியில் ராம் நவமி ஊர்வலத்தில் கல்லெறியத் திட்டமிட்டு வீட்டு மாடிகளில் வைக்கப்பட்டிருந்த கற்குவியலைக் காவல் துறையினர் கண்டறிந்ததாகப் பரவும் வீடியோ குறித்த தகவல் உண்மை அல்ல. இது ஊர்வலத்தையொட்டி செய்யப்படும் வழக்கமான பணி என்று ராஞ்சி காவல் துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.  

Please complete the required fields.




Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader