பெரியார் சிலை அவமதிப்பு கேட்டு வைகோ கண்ணீர் விட்ட வீடியோவா?
பரவிய செய்தி
பெரியார் சிலை அவமதிப்பை கேட்டு கண்ணீர் விட்ட வைகோ!
மதிப்பீடு
விளக்கம்
கோவையில் பெரியார் சிலையின் மீது காவி சாயம் ஊற்றி அவமதித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில், பெரியார் சிலை அவமதிப்பைக் கேட்டு வைகோ கண்ணீர் விட்டு அழுவதாக கீழ்க்காணும் வீடியோ முகநூலில் வலதுசாரி ஆதரவு பக்கங்களில் வைரல் செய்யப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
கோவையில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்ட சம்பவத்திற்கு மதிமுக பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டு உள்ளதாக ஜூலை 17-ம் தேதி செய்திளில் வெளியாகி இருக்கிறது. ஆனால், வைகோ கண்ணீர் விட்டு அழுததாக எந்தவொரு வீடியோவும் வெளியாகவில்லை.
வைகோ கண்ணீர் விட்டு அழும் வைரல் வீடியோ குறித்து ஆராய்ந்து பார்த்த போது, கடந்த 2018-ம் ஆண்டில் தினமலர் யூடியூப் சேனலில் ” Seeman reason for suicide – குலுங்கி அழுத வைகோ ” எனும் தலைப்பில் வெளியான செய்தியில் வைரல் செய்யப்படும் காட்சி 30-வது நொடியில் இருந்து இடம்பெற்று இருக்கிறது.
2018-ம் ஆண்டு ஏப்ரல் 13-ம் தேதி வைகோவின் மைத்துனர் மகன் சரவணசுரேஷ் என்பவர் தீக்குளித்து இறந்த சம்பவத்தின் போது கண்ணீர் விட்டு அழுதபடியே பேட்டி அளித்த வீடியோவில் இருந்து 24 நொடிகள் கொண்ட பகுதியை மட்டும் கட் செய்து தற்போது பரப்பி வருகிறார்கள்.
2018-ம் ஆண்டில் வெளியான தினமலர் செய்தியின் வீடியோவில் இருந்தே 24 நொடிகள் கொண்ட காட்சி கட் செய்து பரப்பி வருகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.
முடிவு :
நமது தேடலில், பெரியார் சிலை அவமதிப்பை கேட்டு கண்ணீர் விட்ட வைகோ என வைரல் செய்யப்படும் வீடியோ தவறானது. 2 ஆண்டுகளுக்கு முன்பு தன் உறவினர் இறந்ததற்கு கண்ணீர் உடன் பேட்டி அளித்த வீடியோவில் இருந்து கட் செய்து தற்போது பரப்பி வருகிறார்கள்.