இது அடல் பிகாரி வாஜ்பாயின் குழந்தைப்பருவ புகைப்படம் அல்ல !
பரவிய செய்தி
தங்க நாற்கர சாலை தந்த தலைமகனுக்கு பிறந்த நாள் இன்று.
மதிப்பீடு
விளக்கம்
டிசம்பர் 25-ம் தேதி மறைந்த முன்னாள் இந்தியப் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் பிறந்தநாளுக்கு வாழ்த்துக் கூறுவதாக அவரின் குழந்தைப்பருவ இப்புகைப்படமென இப்புகைப்படத்தை பகிர்ந்து ” தங்க நாற்கர சாலை தந்த தலைமகனுக்கு பிறந்த நாள் இன்று ” என பதிவிட்டு வந்துள்ளனர்.
இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் பகிர்ந்த காரணத்தினால் தமிழிலும் இப்புகைப்படத்தை பயன்படுத்தி டிசம்பர் 25-ம் தேதி முகநூல் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் பதிவுகளை பகிர்ந்து உள்ளனர்.
உண்மை என்ன ?
வாஜ்பாய் தன் தாயுடன் இருக்கும் குழந்தைப்பருவ புகைப்படம் கடந்த 2 ஆண்டுகளாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வந்துள்ளது. ஆனால், வைரல் செய்யப்பட்ட புகைப்படத்தில் இருப்பவர் அடல் பிகாரி வாஜ்பாயே அல்ல.
2018-ம் ஆண்டு மார்ச் 8-ம் தேதி ரானு சங்கர் என்பவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் முழுமையான புகைப்படத்தை எந்தவொரு தலைப்பும் இல்லாமல் பதிவிட்டு இருக்கிறார். அதன் பிறகே இப்புகைப்படம் தவறான தலைப்புடன் வைரலாகி இருக்கிறது.
முசாஃபர்பூரில் உள்ள கமல்பூராவைச் சேர்ந்த ரானு சங்கர் காந்தி ஸ்வராஜ் ஆசிரமம் எனும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். 2020-ம் ஆண்டு பீகார் சட்டமன்ற தேர்தலில் பரு எனும் தொகுதியில் ஜான் ஆதிகர் கட்சியில் போட்டியிட்டார். ரானு சங்கர் தன் தாய் நீலம் சங்கர் உடன் இருக்கும் புகைப்படத்தை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாக அன்னையர் தினத்தின் போது முகநூலில் பகிர்ந்து உள்ளார்.
” நான் 1976-ம் ஆண்டில் பிறந்தேன், இப்புகைப்படம் 1977 அல்லது 1978-ல் எடுக்கப்பட்டது. என்னுடைய தாய் 1980-ம் ஆண்டில் உயிரிழந்தார் ” என தாயுடன் இருக்கும் புகைப்படத்தை ரானு சங்கர் பகிர்ந்து கொண்டதாக விஸ்வாஸ் நியூஸ் எனும் இந்தி இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது.
முடிவு :
நம் தேடலில், மறைந்த முன்னாள் இந்தியப் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் பிறந்தநாளுக்கு வாழ்த்துக் கூறி பகிரப்படும் புகைப்படத்தில் இருப்பது வாஜ்பாய் அல்ல என அறிய முடிந்தது.