பிரதமர் மோடி தொடங்கி வைத்த வந்தே பாரத் இரயிலின் இரும்பு சக்கரம் தட்டையானதா ?
பரவிய செய்தி
டயர் பஞ்சர் ஆகும்போது லோடு தாங்காம கார் அல்லது லாரி மாதிரி வாகனங்களின் ரிம் சப்பையாகும். எத்தனையோ விதமான ரயில் விபத்துகளைப் பாத்திருப்போம். எதிலும் ரயில் வண்டியின் இரும்புச் சக்கரம் இப்படி தட்டையாகறதை பாத்திருக்கவே முடியாது. இதான் வந்தே பாரத். எது எக்கேடு கெட்டுப்போனா என்ன..
மதிப்பீடு
விளக்கம்
பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்த வந்தே பாரத் இரயிலின் இரும்பு சக்கரம் பழுதாகி தட்டையாகி உள்ளதாக சமூக வலைத்தளங்களில் இப்புகைப்படம் வைரலாகப் பரவி வருகிறது. இரயிலின் சக்கரம் இதுவரை இப்படித் தட்டையானது இல்லை எனவும், இது தான் வந்தே பாரத் எனவும் விமர்சித்து வருகின்றனர்.
உண்மை என்ன?
குஜராத் முதல் மகாராஷ்ட்ரா வரை செல்லும் வந்தே பாரத் இரயிலை கடந்த செப்டம்பர் 30ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். வந்தே பாரத் இரயில் சேவையைத் தொடங்கிய முதல் வாரத்திலேயே இரண்டு முறை மாடுகள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் இரயிலின் முன் பகுதி சிறிது பழுதடைந்தது. இது பெரும் சர்ச்சையாகியது.
டெல்லியில் இருந்து வாரணாசி வரை செல்லும் வந்தே பரத் இரயில் 2019ம் ஆண்டுப் பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. அந்த இரயிலின் சக்கரம் கடந்த அக்டோபர் 8ம் தேதி வாரணாசி அருகே சென்றுக்கொண்டிருந்தபோது பழுதாகி நின்றது. இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். இப்படி வந்தே பாரத் இரயில் தொடர்ந்து சேதம் மற்றும் பழுதாகிய காரணத்தினால் ஆளும் அரசின் மீது விமர்சனங்கள் எழுந்தது.
இந்நிலையில், பழுதாகிய வந்தே பாரத் இரயிலின் சக்கரம் தட்டையாகி உள்ளது என இப்புகைப்படம் வைரலாகப் பரவி வருகிறது.
வைரலானப் புகைப்படத்தை ரிவேர்ஸ் இமேஜ் செய்து பார்க்கையில், இந்தப் புகைப்படம் கடந்த 2013ல் இருந்தே இணையத்தில் பரவி வருவது தெரிய வந்தது. மேலும் இந்தப் புகைப்படத்தை நையாண்டியாகப் பல வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்கள்.
டெல்லி முதல் வாரணாசி வரை செல்லும் வந்தே பாரத் இரயிலின் சக்கரம் கடந்த அக்டோபர் 8ம் தேதி பழுதாகி இருந்தாலும், சமூக வலைத்தளங்களில் பரவும் புகைப்படத்தில் இருப்பது வந்தே பாரத் இரயிலின் சக்கரம் இல்லை என நம்மால் புரிந்துக் கொள்ள முடிகிறது.
முடிவு :
நம் தேடலில், பிரதமர் மோடி தொடங்கி வைத்த வந்தே பாரத் இரயிலின் இரும்பு சக்கரம் தட்டையானது என வைரலாகப் பரவும் புகைப்படம் தவறானது. அது வந்தே பாரத் இரயில் அல்ல. இப்புகைப்படம் கடந்த 2013ல் இருந்தே இணையத்தில் பரவி வருகிறது என அறிய முடிகிறது.