ஆணவக் கொலையால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு எம்.பி திருமாவளவன் நிதி திரட்டிக் கொடுத்ததை தவறாகப் பரப்பும் பாஜகவினர் !
பரவிய செய்தி
என்ன அண்ணே இதெல்லாம்?
மதிப்பீடு
விளக்கம்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்.பியுமான தொல்.திருமாவளவன் மேடையில் நின்றுக் கொண்டு தொண்டர்களிடம் கட்சி நிவாரண நிதியை வசூல் செய்வதாகக் கூறி வீடியோ ஒன்றை தமிழ்நாடு பாஜகவின் இளைஞரணித் தலைவர் ரமேஷ் சிவா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். இந்த வீடியோ கடந்த 2023 டிசம்பர் 1ம் தேதி mechanic._.patrai எனும் பக்கத்தில் பதிவாகி இருக்கிறது.
View this post on Instagram
உண்மை என்ன ?
மேடையில் நிதி திரட்டியது குறித்து எம்.பி தொல்.திருமாவளவன் அவர்களின் எக்ஸ் பக்கத்தில் தேடுகையில், 2023 ஏப்ரல் 22ம் தேதி அதே மேடையில் எடுக்கப்பட்ட வீடியோ உடன் பதிவு ஒன்றை வெளியிட்டு இருப்பதை பார்க்க முடிந்தது.
ஆறுதல் நிதி வழங்கினோம்!
~~~~~~~~~~
தமிழகத்தில் தொடரும் #சாதி ஆணவப் படுகொலைகளைத் தடுத்திட சட்டம் இயற்ற வலியுறுத்தியும், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே அருணபதியில் நடந்த ஆணவக்கொலைகளை கண்டித்தும், உயிருக்குப் போராடும் அனுசுயாவுக்கு நீதி கிடைத்திட வேண்டும் என இன்று… pic.twitter.com/1LNh6TJdpx— Thol. Thirumavalavan (@thirumaofficial) April 22, 2023
அதில், ” ஆறுதல் நிதி வழங்கினோம்!. தமிழகத்தில் தொடரும் சாதி ஆணவப் படுகொலைகளைத் தடுத்திட சட்டம் இயற்ற வலியுறுத்தியும், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே அருணபதியில் நடந்த ஆணவக்கொலைகளை கண்டித்தும், உயிருக்குப் போராடும் அனுசுயாவுக்கு நீதி கிடைத்திட வேண்டும் என இன்று கிருஷ்ணகிரியில் எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஒரே குடும்பத்தில் இருவர் சாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அனுசுயா என்கிற இளம்பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆர்ப்பாட்ட மேடையிலே நிதி திரட்டி அவர்களது குடும்பத்திற்கு 3,26,000 ரூபாய் ஆறுதல் நிதியாக வழங்கப்பட்டது. ஒரே சமூகத்தில் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட ஜெகன் குடும்பத்திற்கு 2,00,000 ரூபாய் ஆறுதல் நிதி வழங்கினோம். ” என இடம்பெற்றுள்ளது.
2023 ஏப்ரல் 22ம் தேதி வெளியான தி இந்து தமிழ் செய்தியில், ‘கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆணவக் கொலை தடுப்பு சட்டத்தை நிறைவேற்றிட வலியுறுத்தி எம்.பி தொல்.திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், கிருஷ்ணகிரி அருகே கொலை செய்யப்பட்ட ஜெகனின் பெற்றோரிடம் ரூ.2 லட்சம் மற்றும் ஊத்தங்கரை அருனபதி கிராமத்தில் கொலை செய்யப்பட்ட சுபாஷின் மனைவியான அனுசுயாவின் பெற்றோரிடம் ரூ.3.26 லட்சம் நிவாரண தொகையாக அளிக்கப்பட்டது ‘என்றுள்ளது.
மேலும் படிக்க : இலங்கையில் பெண்களுடன் சிக்கிய புத்த பிக்கு எம்.பி திருமாவளவன் உடன் இருப்பதாகப் பரவும் வதந்தி !
மேலும் படிக்க : எம்பி திருமாவளவன் வெளியிட்ட புத்தகத்தை எடிட் செய்து தவறாகப் பரப்பும் வலதுசாரிகள் !
ஆணவப் படுகொலையால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு கட்சி தொண்டர்களிடம் இருந்து நிதி திரட்டி கொடுத்ததை பாஜகவினர் தவறாகப் பரப்பி வருகின்றனர். இதற்கு முன்பும், தொல்.திருமாவளவன் பற்றி பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டு இருக்கின்றன.
முடிவு :
நம் தேடலில், எம்.பி திருமாவளவன் மேடையில் கட்சி நிவாரண நிதி திரட்டுவதாக பாஜகவினர் பரப்பும் வீடியோ தவறானது. இது கடந்த 2023ல் கிருஷ்ணகிரி ஆர்ப்பாட்டத்தின் போது ஆணவப் படுகொலையால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு கட்சி தொண்டர்களிடம் இருந்து நிதி திரட்டி கொடுத்த வீடியோ என்பதை அறிய முடிகிறது.