லண்டன் பங்கு சந்தையில் இருந்து வெளியேறியது வேதாந்தா குழுமம்..!
பரவிய செய்தி
ஸ்டெர்லைட் ஆலையின் தாய் நிறுவனமான வேதாந்தா நிறுவனத்திற்கு எதிராக பிரித்தானியாவில் ஈழத் தமிழர்கள் போராடியதை தொடர்ந்து லண்டன் பங்கு சந்தையில் இருந்து வெளியேற சொல்லி வேதாந்தாவிற்கு பிரிட்டன் எதிர் கட்சி கண்டனம்.
மதிப்பீடு
சுருக்கம்
ஸ்டெர்லைட் போராட்டத்தில் தூத்துக்குடி மக்கள் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தால் பிரிட்டன் பங்கு சந்தையில் இருந்து வேதாந்தா குழுமம் வெளியேற வேண்டும் என்று பிரிட்டனின் தொழிலாளர்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதையடுத்து வேதாந்தா குழுமம் லண்டன் பங்கு சந்தையில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
விளக்கம்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர், பலர் படுகாயமடைந்தனர். சுற்றுப்புறச் சூழல் பாதிப்பு, மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் இவற்றிற்கு நீதி கேட்டு தொடங்கிய போராட்டம் 100-வது நாளில் பலரின் உயிரை பறித்தது. இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து இந்தியா மட்டுமின்றி தமிழர்கள் வசிக்கும் பல நாடுகளில் போராட்டம் நடைபெற்றன.
கார்ப்ரேட் படுகொலைக்கு எதிராக லண்டனில் “ Foil Vedanta ” மற்றும் பிரிட்டன் வாழ் தமிழ் மக்கள் என பல குழுக்கள் இணைந்து வேதாந்தா நிறுவனத்தின் தலைவர் அனில் அகர்வால் வீடு முன்பாகவும், இந்திய தூதரகத்தின் முன்பும் பறை ஓசையுடன், கோஷங்களை எழுப்பி போராடினார்கள். மக்கள் சுவாசிக்கும் காற்று மற்றும் நீரை மாசுப்படுத்தி பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த நிறுவனம் லாபம் பார்ப்பது கண்டனத்துக்குரியது என்று போராடியவர்கள் கருத்துகளை தெரிவித்தனர். இந்த போராட்டம் சமூக வலைத்தளங்கள் மட்டுமின்றி லண்டன் செய்தி நிறுவனங்களின் கவனத்தை ஈர்த்தது.
பிரிட்டனின் எதிர்க் கட்சியான தொழிலாளர்கள் கட்சியின் தலைவர் எம்.பி. John McDonnell, வேதாந்தா குழுமத்தை லண்டன் பங்கு சந்தையில் இருந்து வெளியேற சொல்லி கண்டனம் தெரிவித்துள்ளார்.
“ தமிழ்நாட்டில் வேதாந்தா நிறுவனத்திற்கு எதிராக போராடிய மக்களில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை அளித்ததோடு, அதற்கான நடவடிக்கையும் தேவைப்படுகிறது. சர்வதேச அளவில் மிகப்பெரிய நிறுவனம் சில ஆண்டுகளாக சட்டத்திற்கு புறம்பாக சுரங்கத் தொழிலில் ஈடுபடுவது, சுற்றுச்சூழலை அழிப்பது, அங்குள்ள மக்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்துவது போன்ற செயலில் ஈடுபடுகிறது. Amnesty international போன்ற சர்வதேச என்.ஜி.ஒ-க்கள், வேதாந்தா நிறுவனம் இந்தியா, சாம்பியா உள்ளிட்ட உலகின் பல பகுதிகளில் மனித உரிமை மீறல் மற்றும் சுற்றுப்புறத்தை அழிப்பதாக குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்த வாரத்தில் போராடுபவர்களை படுகொலை செய்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். வேதாந்தா நிறுவனம் உடனடியாக லண்டன் பங்கு சந்தையில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும், பங்கு சந்தையின் ஆளுமையின் நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டும் மற்றும் இந்த முரட்டுத்தனமான தொழிற்சாலைகளால் லண்டன் நிதிச் சந்தையின் புகழை சேதப்படுத்துவது தடுக்க வேண்டும் ” இவ்வாறு பிரிட்டன் தொழிலாளர்கள் கட்சியின் சார்பில் எம்.பி. John McDonnell தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் நடைபெற்ற படுகொலைக்கு பிரிட்டன் எதிர் கட்சியினரே ஒரு நிறுவனத்திற்கு எதிராக கண்டனம் தெரிவித்து வெளியிட்ட அறிக்கை மிக முக்கிய கவன ஈர்ப்பாக பார்க்கப்படுகிறது.
ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடி சுற்றுவட்டாரத்தில் நீரும், நிலமும், காற்றும் மாசடைவது தொடந்துள்ளது. மேலும், இதனால் அங்குள்ள மக்களுக்கு மூச்சுத்திணறல், தோல் நோய்கள், கருச்சிதைவு, கேன்சர் உள்ளிட்ட பாதிப்புகள் உண்டாகின.
மக்கள் போராடிய தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து நாள் ஒன்றிக்கு 1,200 டன் வீதம் வருடத்திற்கு 4.38 லட்சம் டன் copper anodes தயாரிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.