உத்தரப் பிரதேசத்தில் அகோரிகள் சிறுவனை நரபலி கொடுக்க முயற்சி எனப் பரவும் சித்தரிக்கப்பட்ட வீடியோ!
பரவிய செய்தி
உத்திரபிரதேசம் வாரணாசியில் அகோரிகள் சேர்ந்து ஒரு சிறுவனை நரபலி கொடுக்கும் முயற்சிக்கும் போது ஒரு வாலிபர் அதை தடுக்க முயற்சிக்கும் பதை பதைக்கும் காட்சி…
மதிப்பீடு
விளக்கம்
உத்தரப் பிரதேசம் மாநிலம் வாரணாசியில் அகோரிகள் சிலர் ஒரு சிறுவனை நரபலி கொடுக்க முயன்றதை இளைஞர் ஒருவர் தடுத்து நிறுத்தியதாக வீடியோ ஒன்று திமுக ஆதரவாளர்களால் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது.
*உத்திரபிரதேசம் வாரணாசியில் அகோரிகள் சேர்ந்து ஒரு சிறுவனை நரபலி கொடுக்கும் முயற்சிக்கும் போது ஒரு வாலிபர் அதை தடுக்க முயற்சிக்கும் பதை பதைக்கும் காட்சி.
மதம் – கடவுள் நம்பிக்கையின் பெயரால் வடநாடு குறிப்பாக உத்திரபிரதேசம் போகும் பாதையை நினைத்தால் பயமாக இருக்கிறது. pic.twitter.com/68wtnT5zEC
— Umabharathi Thirumoorthi (@UmabharathiT) March 2, 2024
உண்மை என்ன?
பரவக் கூடிய வீடியோவின் கீஃப்ரேம்களை கொண்டு இணையத்தில் தேடியதில், அதன் முழு வீடியோ ’Haunted Guru Ji’ என்னும் யூடியூப் பக்கத்தில் கடந்த ஜனவரி 24ம் தேதி பதிவிடப்பட்டிருப்பதைக் காண முடிந்தது.
அந்த முழுமையான வீடியோவில் பரவக் கூடிய பகுதி 3 நிமிடம் 44வது வினாடிக்கு மேல் இடம் பெற்றுள்ளது. அந்த வீடியோவின் நிலைத்தகவலில் (Disclaimer) ‘பொழுது போக்கிற்காக எடுக்கப்பட்டது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கொண்டு அந்த யூடியூப் பக்கத்தைப் பார்வையிட்டதில் இதே போன்று பல வீடியோக்கள் அப்பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அவை அனைத்தும் சித்தரிக்கப்பட்டு எடுக்கப்பட்டவை.
இப்படி இளைஞர்கள் சிலர் பொழுதுபோக்கிற்காகச் சித்தரிக்கப்பட்டு எடுக்கப்பட்ட வீடியோவை உத்தரப் பிரதேசத்தில் நடந்த உண்மை சம்பவம் எனத் தவறாகப் பரப்புகின்றனர்.
மேலும் படிக்க : தமிழ்நாட்டில் குழந்தை கடத்தல் தொடர்பாகப் பரப்பப்படும் வதந்திகள்!
தமிழ்நாட்டில் குழந்தைகள் கடத்தப்பட்டு உடல் உறுப்புகள் திருடப்படுவதாக வதந்திகள் பரப்பப்பட்டது. அது பற்றிய உண்மைகளும் யூடர்னில் கட்டுரையாக வெளியிடப்பட்டுள்ளது.
முடிவு :
நம் தேடலில், உத்தரப் பிரதேசத்தில் அகோரிகள் சிறுவன் ஒருவனை நரபலி கொடுக்க முயன்றதாகப் பரவும் வீடியோ சித்தரிக்கப்பட்டது என்பதை அறிய முடிகிறது.