விஜய் கோரிக்கையை தமிழக அரசு ஏற்றதாகப் பரவும் போலியான நியூஸ் கார்டு !
பரவிய செய்தி
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் எங்கள் அண்ணன் தளபதி விஜய் அண்ணா அவர்கள் மாஸ்டர் படத்திற்கு 100% திரையரங்கம் அனுமதி தந்திருக்கு தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
மதிப்பீடு
விளக்கம்
நடிகர் விஜய் சில நாட்களுக்கு முன்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து திரையரங்குகளில் 100% பார்வையாளர்களை அனுமதிக்குமாறு கோரிக்கை வைத்ததாக செய்திகள் வெளியாகின.
அவரின் சந்திப்பிற்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி அளித்த பேட்டி ஒன்றில், மாஸ்டர் திரைப்படத்திற்காக மட்டுமல்லாமல், பல கோடி முதலீடு செய்து பல திரைப்படங்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், அதற்காக நல்ல முடிவை எடுக்குமாறு விஜய் அனைவருக்குமாக பேசியதாகத் தெரிவித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.
இந்நிலையில், நடிகர் விஜயின் கோரிக்கையை ஏற்று திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு தமிழக அரசு அனுமதி அளித்ததாக தந்தி டிவி செய்தியின் நியூஸ் கார்டு பகிரப்பட்டு வருகிறது.
டிசம்பர் 28-ம் தேதியிட்ட தந்தி டிவி நியூஸ் கார்டில், ” ஜனவரி 10 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுடன் இயங்க அனுமதி. அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிந்திருக்க வேண்டும் ” என இடம்பெற்றுள்ளது.
ஆனால், திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக தமிழக அரசு தரப்பில் அப்படி எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை. அதேபோல், தந்தி டிவி நியூஸ் கார்டும் போலியானதே. 28-ம் தேதி வெளியான செய்தியில் எடிட் செய்து போலியான செய்தியைப் பரப்பி வருகிறார்கள்.
அப்டேட் :
தமிழக திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு ஒப்புதல் அளித்து தமிழக அரசு அரசாணைப் பிறப்பித்து உள்ளது.