விநாயகர் சதுர்த்திக்கு குறைந்த சிலைகளை அமைக்க திமுக அரசு வழக்கு தொடுத்ததாக வதந்தி பரப்பும் பாஜகவினர்
பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
“விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் குறைந்த எண்ணிக்கையில் விநாயகர் சிலைகளை அமைக்க உத்தரவிட கோரிய வழக்கை தள்ளுபடி செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது”, என்ற செய்தியைக் கொண்ட தினமலர் நியூஸ் கார்டை ‘நீதிமன்றத்திடம் அடிவாங்குவதே விடியல் அரசுக்கு வாடிக்கையா போச்சு’ என்று திமுக-வைக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இதை தமிழக பாஜகவைச் சேர்ந்த செயற்குழு உறுப்பினர் சவுதா மணி என்பவரும் ட்விட்டரில் பகிர்ந்து இருக்கிறார்.
நீதிமன்றத்திடம் அடிவாங்குவதே விடியல் அரசுக்கு வாடிக்கையா போச்சு pic.twitter.com/389tEZWOGZ
— Rayagiri Vignesh IT&SM BJP (@VpkVignesh) August 17, 2022
உண்மை என்ன ?
ஆகஸ்ட் 17-ம் தேதி, ” விநாயகர் சதூர்த்தி பண்டிகையை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் குறைந்த எண்ணிக்கையில் விநாயகர் சிலைகளை அமைக்க உத்தரவிட கோரிய வழக்கை தள்ளுபடி செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது ” என தினமலர் நியூஸ் கார்டு ஒன்றை பதிவிட்டு இருக்கிறது. ஆனால், வழக்கை தொடுத்தது திமுகவா அல்லது வேறு யார் என்பதை குறிப்பிடாமலேயே தினமலர் நியூஸ் கார்டை வெளியிட்டு இருக்கிறது.
மேற்கொண்டு தேடிய போது, ஆகஸ்ட் 16ம் தேதி தினமலரின் இணையதளத்தில், ” திருப்பூரைச் சேர்ந்த இந்து முன்னேற்றக் கழகத் தலைவர் கோபிநாத், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “விநாயகர் சதுர்த்தி பண்டிகை வரும் 31ல் கொண்டாடப்பட உள்ளது.
விநாயகர் சதுர்த்தி பண்டிகையின்போது, பொது இடங்கள், சாலைகள் மற்றும் பிற மத வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் விநாயகர் சிலைகள் வைக்கப்படுகின்றன. அதனால் போக்குவரத்து இடையூறும், சட்டம் – ஒழுங்கு பிரச்சினையும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
அதேபோல, சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதையும் வரன்முறைப்படுத்த எவ்வித விதிகளும் வகுக்கப்படவில்லை. விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்துக்கு என, இந்து அமைப்புகள் வசூலிக்கும் நன்கொடையை கண்காணிக்க வேண்டும். மேலும், மாநிலம் முழுவதும் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே விநாயகர் சிலைகளை வைக்க வேண்டும் என, இந்து அமைப்புகளை அறிவுறுத்துமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என கூறப்பட்டு உள்ளதாக வெளியாகி இருக்கிறது.
முடிவு :
நம் தேடலில், விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு மாநிலம் முழுவதும் குறைந்த எண்ணிக்கையில் விநாயகர் சிலைகளை அமைக்க உத்தரவிட கோரிய திமுக வழக்கு தொடர்ந்ததாக பாஜகவினர் பரப்பும் தகவல் வதந்தியே. வழக்கு தொடுத்தது திருப்பூரைச் சேர்ந்த ஹிந்து முன்னேற்ற கழகத் தலைவர் என அறிய முடிகிறது.