ஹரியானா வன்முறையுடன் தொடர்புப்படுத்தி தவறாகப் பரவும் 2019ல் எடுக்கப்பட்ட சூரத் வன்முறை வீடியோ !

பரவிய செய்தி

நாடு முழுக்க அப்பாவி பொது மக்களின் மீது.. அரசாங்க சொத்துக்கள் மீதும் கல் எறிந்து கலவரம் செய்யும் மதவெறி ஜிஹாதிகளின் கோரமுகம்…Twitter Link | Archive Link

மதிப்பீடு

விளக்கம்

கடந்த ஜூலை 31 அன்று ஜெய்ப்பூர்-மும்பை ரயிலில் பயணித்த 3 இஸ்லாமிய பயணிகள் மற்றும் உடன் பணியாற்றிய காவல் அதிகாரியை ரயில்வே பாதுகாப்பு படையின் (ஆர்பிஎஃப்) காவலர் ஒருவர் சுட்டுக் கொலை செய்த சம்பவமும், அதே நாளில் ஹரியானாவின் குருகிராமில், விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினரின் பேரணியில் உருவான கலவரமும் இந்தியா முழுவதும் உள்ள சிறுபான்மையினர் மத்தியில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நாடு முழுவதும் அப்பாவி பொது மக்களின் மீதும், அரசாங்க சொத்துக்கள் மீதும் கல் எறிந்து கலவரம் செய்யும் முஸ்லீம்களின் கோரமுகம் தெரிந்ததாகக் கூறி வீடியோ ஒன்றை பாஜகவினர் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகப் பரப்பி வருகின்றனர். மேலும் அந்த வீடியோவில் கும்பல் ஒன்று இரண்டு பேருந்துகளை அடித்து நொறுக்குவதைக் காண முடிந்தது.

Archive Link

உண்மை என்ன ?

பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இந்த வீடியோ கடந்த 2019-இல் இருந்தே சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வந்துள்ளதை காண முடிந்தது.

Archive Link

எனவே இதுகுறித்து ஆய்வு செய்ததில், இந்த வீடியோவில் உள்ள பேருந்தில் “Sitilink” என்ற வாசகம் எழுதப்பட்டிருந்ததைக் காண முடிந்தது. சிட்டிலிங்க் என்பது பொதுவாக குஜராத் மாநிலத்தின் சூரத்தில் அமைந்துள்ள ஒரு பொதுப் பேருந்து போக்குவரத்து நிறுவனம்.

மேலும் 2019 ஜூலை 6 அன்று வெளியிடப்பட்ட டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் ஒரு கட்டுரையில் இது குறித்த செய்திகள் வெளியிடப்பட்டிருந்தது. அதில், “குவாஜா தானா தர்காவிலிருந்து மக்காய் குளம் வரை Versatile Minorities Forum (VMF) என்ற அமைப்பு நடத்திய பேரணியில் இரண்டு நகரப் பேருந்துகளை சேதப்படுத்திய கும்பல், கல் எறிந்ததில் ஐந்து போலீஸார் காயமடைந்தனர்.

பேரணியில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். பேரணியில் பங்கேற்றவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க மக்காய் குளத்தை கடந்து செல்ல அனுமதிக்கப்படாததால், ஒரு பகுதியினர் திரண்டனர். டேக் ஆஃப் ரெஸ்டாரன்ட் அருகே மாநகரப் பேருந்தை குறிவைத்த கும்பல், அதன் ஜன்னல் கண்ணாடிகளையும் மற்றொரு பேருந்தை வேறு இடத்திலும் உடைத்தது.” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே போன்று, ஜூலை 5, 2019 அன்று Divyang News Channel என்ற யூடியூப் பக்கத்திலும் இது குறித்த வீடியோ பதிவு செய்யப்பட்டிருந்தது. அதில் சமூக ஊடகங்களில் பரவி வருவதைப் போலவே சேதமடைந்த பேருந்தின் காட்சிகளையும், வீடியோ காட்சியின் பின்னணியில் உள்ள கட்டிடங்கள் வைரலான வீடியோவுடன் ஒத்துப்போவதையும் காண முடிந்தது.

மேலும் TV9 Gujarati மற்றும் ABP Asmita யூடியூப் சேனல்களும் இந்த சம்பவம் குஜராத்தின் சூரத் நகரில் கடந்த 2019ன் போது நடந்தது என்பது குறித்த செய்திகளை தங்களுடைய அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் செய்தியாக வெளியிட்டுள்ளன. 

மேலும் படிக்க: இந்து எனக் கூறி லவ் ஜிகாத் செய்ய முயன்ற முஸ்லீம் இளைஞர்களுக்கு போலீஸ் தடியடி எனப் பரவும் பொய் !

மேலும் படிக்க: கேரளாவில் இந்துக்கள் வீடுகள் மீது முஸ்லீம்கள் கற்களை வீசி காலி செய்ய மிரட்டுவதாகப் பரவும் வதந்தி!

முடிவு:

நம் தேடலில், பொது சொத்துகளை சேதம் செய்து கலவரம் ஏற்படுத்தும் முஸ்லீம்கள் என பாஜகவினர் சமூக ஊடகங்களில் பரப்பி வரும் வீடியோ, தற்போது எடுக்கப்பட்டதல்ல. இது கடந்த 2019ன் போது குஜராத்தின் சூரத் நகரில் நிகழ்ந்த கலவரத்தின் போது எடுக்கப்பட்டது என்பதை அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Krishnaveni S

Krishnaveni, working as a Sub-Editor in You Turn. Completed her Master's in History from Madras University. Along with that, she holds a Bachelor’s degree in Electrical Engineering and also in Tamil Literature. She was a former employee of an IT Company and now she currently finds fake news on social media to verify factual accuracy.
Back to top button
loader