விருதுநகர் அரசு மருத்துவமனையில் தீக்காய சிகிச்சைப் பிரிவு இல்லை என நாதக வேட்பாளர் கெளஷிக் சொன்ன பொய்!
பரவிய செய்தி
தீக்காய சிகிச்சைப் பிரிவு நமது தலைமை மருத்துவமனையில் உறுதியாக கொண்டுவரப்படும், விருதுநகர் வேட்பாளர் சீ கெளசீக்
மதிப்பீடு
விளக்கம்
நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அப்படி நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த விருதுநகர் மக்களவை தொகுதி வேட்பாளர் கெளஷிக் பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருக்கும் போது செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்.
தீக்காய சிகிச்சைப் பிரிவு நமது தலைமை மருத்துவமனையில் உறுதியாக கொண்டுவரப்படும்,*விருதுநகர் வேட்பாளர் சீ கெளசீக்#சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி #விருதுநகர் pic.twitter.com/PxsN6huF5e
— Senthan guru (சேந்தன் குரு) ️ (@guru_senthan) April 4, 2024
அவர் பேசியது, ”தீக்காய சிகிச்சை நம்ம விருதுநகரில் இல்லை. இங்கு ஏதாவது ஆனால் மதுரை வரை சென்றுதான் அதனைக் கொண்டு வருவார்கள். அங்குதான் தீக்காய சிகிச்சை எல்லாம் இருக்கிறது. அதற்கான முயற்சியையும் நான் எடுப்பேன். தீக்காய சிகிச்சை, ICU யூனிட் எல்லாம் ஒரு மருத்துவராக நான் உங்களுக்காக அதைச் செய்வேன்” என்றுள்ளார்.
உண்மை என்ன?
நாம் தமிழர் வேட்பாளர் பேசியதைத் தொடர்ந்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் தீக்காயங்களுக்குச் சிகிச்சைப் பிரிவு உள்ளதா என்பது குறித்துத் தேடினோம்.
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக விருதுநகர் அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டுள்ளது. விருதுநகர் மருத்துவமனை உட்பட 11 மருத்துவமனைகளுக்குக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் புதிய கட்டிடங்கள் கட்டித்தரப்பட்டுள்ளது.
மேலும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த மருத்துவமனையில் தீக்காயத்திற்கு எனத் தனிப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இது குறித்து ‘தினமலர்’ இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.
இதுமட்டுமின்றி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாகத் தரம் உயர்த்தப்பட்டதிலிருந்து சிறுநீரக கல் உடைக்கும் இயந்திரம், சிசுக்கான எக்கோ இயந்திரம் எனப் பல சிகிச்சை முறைகள் அந்த மருத்துவமனையில் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதில் இருந்து நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தவறான தகவலைக் கூறியுள்ளார் என்பதை அறிய முடிகிறது. விருதுநகர் அரசு மருத்துவமனையில் தீக்காய சிகிச்சைப் பிரிவு செயல்பட்டு வருகிறது.
வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யும் போது உறுதிமொழி படிக்க வேண்டும். அப்படி நாம் தமிழர் கட்சி சார்பில் கெளஷிக் வேட்புமனு தாக்கல் செய்யும் போது உறுதிமொழி தமிழில் இருந்ததால் படிக்கத் தெரியாமல் நின்றுள்ளார். மாவட்ட தேர்தல் அலுவலர் உறுதிமொழியைப் படிக்க, அதைத் திரும்பச் சொல்லி கெளஷிக் உறுதிமொழி எடுத்தார். கெளஷிக் ஓமன் நாட்டில் படித்ததால் அவருக்குத் தமிழ் படிக்கத் தெரியாது என நாம் தமிழர் கட்சியினர் சார்பில் பின்னர் விளக்கம் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : 37,554 அரசு பள்ளிகள் உள்ள தமிழ்நாட்டில் தமிழ் படிக்க பள்ளிக்கூடங்கள் இல்லை எனப் பொய் சொல்லும் சீமான்!
தமிழ்நாட்டில் தமிழ்ப் பள்ளிகள் இல்லாததால் தனது இரண்டு மகன்களும் ஆங்கில வழி பள்ளியில் படிப்பதாகச் செய்தியாளர் சந்திப்பில் சீமான் கூறினார். தமிழ்நாட்டில் அரசு நடத்தும் தமிழ்வழி பள்ளிகள் எத்தனை உள்ளன என ஆதாரத்துடன் யூடர்னில் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.
முடிவு :
விருதுநகர் அரசு மருத்துவமனையில் தீக்காய சிகிச்சைப் பிரிவு இல்லை என நாம் தமிழர் வேட்பாளர் கெளஷிக் பேசிய தகவல் உண்மை அல்ல. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் தீக்காய சிகிச்சைப் பிரிவு விருதுநகர் அரசு மருத்துவமனையில் செயல்படுகிறது.