This article is from Jul 06, 2020

வி.கே.கிருஷ்ணமேனன் சீனப் பெண்களுடன் பேசும் புகைப்படமா ?

பரவிய செய்தி

1962 ல சீனாவிடம் இந்தியா ஏன் தோற்றதுன்னு படம் பார்த்தாலே தெரியுது.காங்கிரஸ் கட்சிய சேர்ந்த இந்திய பாதுகாப்பு அமைச்சர் கிருஷ்ணமேனன் சீன பெண்களுடன் சுமூகமாக பேசியபோது கிளிக்யது.

Facebook link | archive link 

மதிப்பீடு

விளக்கம்

1962-ம் ஆண்டு சீனாவுடன் நடைபெற்ற போரில் இந்தியா தோல்வியை சந்தித்தது. அன்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும், இந்தியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சருமான கிருஷ்ணமேனன் சீனப் பெண்களுடன் சமூகமாக பேசித் தீர்த்த போது எடுக்கப்பட்டது என கீழ்க்காணும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. இந்த புகைப்படம் பல ஆண்டுகளாகவே ட்விட்டர், யூடியூப் உள்ளிட்டவையில் பகிரப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ? 

வி.கே.கிருஷ்ணமேனன் நீச்சல் உடையில் இருக்கும் பெண்களுடன் பேசும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில் தற்போது பரவும் குற்றச்சாட்டுகளே இந்திய அளவில் கிடைத்தன. பின்னர் அந்த புகைப்படத்தில் ” Historic Images ” என்கிற வார்த்தை இருப்பதை பார்க்க முடிந்தது.

அதை கீ வார்த்தையாகக் கொண்டு தேடுகையில் outlet.historicimages.com எனும் புகைப்பட விற்பனை இணையதளத்தில் “1955 PRESS PHOTO V.K. KRISHNA MENON ” என்கிற பிரிவில் அதன் உண்மையான புகைப்படம் வெளியாகி இருக்கிறது.  அந்த புகைப்படத்தின் விலை 10 டாலர்கள். பணம் செலுத்தி வாங்கினால் மட்டுமே லோகோ இல்லாமல் கிடைக்கும். ஆனால், சமூக வலைதளங்களில் லோகோ உடனே எடுத்து பரப்பி வந்துள்ளனர்.

அந்த புகைப்படத்தில் வலதுபக்க ஓரத்தில் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட வாக்கியம் இருப்பதை பார்க்க முடிகிறது. அதைப் பெரிதுப்படுத்தி மொழிமாற்றம் செய்து பார்க்கையில், வாஷிங்டன் ஜூலை 2, இந்தியத் தூதர் வி.கே.கிருஷ்ணமேனன் மரிலாண்ட் அருகே ஒரு தனியார் நீச்சல் விருந்தில் கலந்து கொண்ட இரு இளம் வெளிநாட்டு மாணவிகளுடன் பேசுகிறார். ஜப்பானின் மிச்சிக்கோ நாகஷிமாவின் தலையில் மேனன் கை வைத்திருக்கிறார், ஸ்பெயினின் பார்சிலோனாவைச் சேர்ந்த பிலாரின் மார்டென்ஸுடன் பேசிக் கொண்டிருக்கிறார். இந்த இரண்டு பெண்களும் அமெரிக்காவிற்கு வருகை தந்த வெளிநாட்டு மாணவர்கள் குழுவில் இடம்பெற்றவர்கள் ” என இடம்பெற்று இருக்கிறது. இப்புகைப்படம் எடுக்கப்பட்டது 1955-ல் எனக் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

வி.கே.கிருஷ்ணமேனன் 1957-62 வரை இந்தியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்தார். அவர் பதவியில் இருக்கும் பொழுது இந்திய-சீன போர் நடைபெற்றது. ஆனால், அதற்கு முன்பாக 1955-ல் அமெரிக்காவில் இருந்த பொழுது வெளிநாட்டு மாணவிகள் இருவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சீனாவைச் சேர்ந்த பெண்களுடன் இருப்பதாக தவறாகப் பரப்பி வருகிறார்கள்.

சீனப் பெண்களோ, வேறு எந்த நாட்டு பெண்களோ நீச்சல் உடையில் இருக்கும் பெண்களுடன் இருக்கிறார் தானே என கேள்விகளை முன்வைப்பர். இந்த புகைப்படம் அவர் இந்தியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சராக ஆவதற்கு முன்பாக அமெரிக்காவில் எடுக்கப்பட்டது. அவ்விரு பெண்களும் மாணவர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : “நேரு” பெண்களுடன் இருக்கும் புகைப்படங்கள்| படங்களில் இருப்பவர்கள் யார் ?

இதேபோல், நேரு பல பெண்களுடன் இருக்கும் புகைப்படங்களை ஒன்றிணைத்து நேரு பெண்களுடன் நெருக்கமாக இருப்பதை பாருங்கள் என அரசியல் சார்ந்த கருத்துக்களை பதிவிட்டனர். ஆனால், அந்த புகைப்படத்தில் இருப்பவர்கள் யார், யார் என கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.

முடிவு : 

நமது தேடலில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் கிருஷ்ணமேனன் சீனப் பெண்களுடன் சுமூகமாக பேசியபோது எடுக்கப்பட்டது எனப் பகிரப்படும் புகைப்படம் தவறானது. இது 1955-ல் அமெரிக்காவில் எடுக்கப்பட்ட புகைப்படம் என அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader