வாட்ஸ் அப் முடக்கப்படும் என மக்களை அச்சமூட்டும் வதந்தி !
பரவிய செய்தி
வாட்ஸ் அப் முடக்கப்படும் தினமும் இரவு 11.30 மணி முதல் காலை 6:00 மணி வரை..மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. நரேந்திர மோடியிடமிருந்து செய்தி (பி.எம்,) வாட்ஸ்அப்பில் பயனர்களை அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். இதை அனுப்ப அனைத்துவாட்ஸ் அப் user-யும் கேட்டுக்கொள்கிறோம்.
மதிப்பீடு
சுருக்கம்
இது தொடர்பாக வாட்ஸ் அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்கள் அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியிடவில்லை. தங்களின் பயனர்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு ஃ பேஸ்புக் நிறுவனம் மன்னிப்பு கோரி உள்ளது.
விளக்கம்
ஜூன் 3-ம் தேதி வாட்ஸ் அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் முடங்கின. இந்திய அளவில் கோடிக்கணக்கான மக்கள் வாட்ஸ் அப், ஃபேஸ்புக் பயனர்களாக இருப்பதால் திடீரென முடங்கியதால் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.
எனினும், சில மணி நேரங்களில் வாட்ஸ் அப், ஃபேஸ்புக் உள்ளிட்டவை செயல்பட ஆரம்பித்த பின்னர் வாட்ஸ் அப்-களில் ஃபார்வர்டு செய்திகள் வைரலாகத் தொடங்கின. அப்படி வைரலாகிய செய்தியில் இனி இரவு 11.30 முதல் 6 மணி வரை வாட்ஸ் அப் முடங்கும், மாதாந்திர கட்டணம் செலுத்த வேண்டும், 10 பேருக்கு ஃபார்வர்டு செய்யுங்கள் என குறிப்பிட்டு இருந்தனர். இன்னும் சில ஃபார்வர்டு செய்திகளில் வாட்ஸ் அப் தடை செய்யப்பட உள்ளதாகவும் பகிர்ந்து வருகின்றனர்.
சில சமயங்களில் சர்வர் பிரச்சனைகள் ஏற்படும் பொழுது சமூக வலைதளங்கள் முடங்குவது இயல்பானது. இதற்கு முன்பாகவும் வாட்ஸ் அப், ஃபேஸ்புக் உள்ளிட்டவை சர்வர் பிரச்சனையால் முடங்கிய நிகழ்வுகள் ஏற்பட்டுள்ளன.
சமீபத்திய பிரச்சனைக்கு பதில் அளித்திரு இருந்த ஃபேஸ்புக் நிறுவனம், ” எங்களின் தளத்தில், செயலியில் புகைப்படங்கள் , வீடியோக்கள், ஆவணங்களை பதிவேற்றுவது அல்லது அனுப்புவதில் பயனர்களுக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனை சரி செய்யப்பட்டு உள்ளது. சிரமத்திற்கு மன்னிக்கவும் ” என தெரிவித்து உள்ளனர்.
சமூக வலைதளங்கள் சர்வர் பிரச்சனை காரணமாக முடங்கும் பொழுது பல ஃபார்வர்டு வதந்திகள் பரவி மக்களை அச்சமடைய செய்யும். தற்பொழுது வாட்ஸ் அப் முடங்கிய சமயத்தில் கூட பல வதந்திகள் ஃபார்வர்டு செய்யப்பட்டன.
முதலில் ஆங்கிலத்தில் பகிரப்பட்ட ஃபார்வர்டு செய்திகள் தற்பொழுது தமிழில் மொழிப்பெயர்க்கப்பட்டு ஃபார்வர்டு செய்யப்படுகிறது. சமூக வலைதளங்களில் வதந்திகள் குறித்து அறியாத மக்கள் இம்மாதிரியான வதந்திகளை உண்மை என நினைத்து அச்சம் கொள்ளக்கூடும்.
வாட்ஸ் அப் தளத்தில் பகிரப்படும் பெரும்பாலான ஃபார்வர்டு செய்திகள் வதந்திகளாகவே இருக்கின்றனர். முடிந்தவரை ஒரு செய்தியை பகிர்வதற்கு முன்னர் செய்தியின் உண்மைத்தன்மையை அறிந்து பகிருங்கள். தவறான செய்திகள் பிறருக்கு ஆபத்துகளை ஏற்படுத்தக்கூடியவை என்பதால் மக்களுக்கு விழிப்புணர்வு அவசியம்.