WHO சைவ உணவு உண்பவர்களை கொரோனா வைரஸ் தாக்காது எனக் கூறியதா ?

பரவிய செய்தி
சைவ உணவுப் பழக்கம் உள்ளவர்களை கொரோனா இதுவரை தாக்கவில்லை – உலகளவில் WHO ஆராய்ச்சி.
மதிப்பீடு
விளக்கம்
சைவ உணவுப் பழக்கம் உள்ளவர்களை கோவிட்-19 நோய்த்தொற்று தாக்கவில்லை என்ற தகவலை உலக சுகாதார நிறுவனத்தின் தரப்பில் வெளியிடப்பட்டதாக ஓர் பார்வர்டு தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
சிலர் உலக சுகாதார நிறுவனம் கூறியதாக பரவும் தகவலை குறிப்பிட்ட சமூகத்துடன் ஒற்றுமைப்படுத்தி பதிவுகளை பதிவிட்டு வருவதையும் பார்க்க முடிந்தது. கோவிட்-19 நோய்த்தொற்று தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் அளித்த உணவு வழிமுறை குறித்து ஆராய்ந்து பார்த்தோம்.
உண்மை என்ன ?
கோவிட்-19 நோய்த்தொற்று உலகளாவிய கொள்ளை நோயாகும். சைவ உணவுகளை உண்பவர்களை கொரோனா தாக்கவில்லை, அசைவ உணவு உண்பவர்களை மட்டுமே கொரோனா வைரஸ் தாக்குவதாக உலக நாடுகளின் தரப்பில் அல்லது செய்திகளில் எங்கும் குறிப்பிடவில்லை.
உலக சுகாதார நிறுவனத்தின் தரப்பில் அப்படியொரு கூற்று வெளியாகியதாக எனத் தேடுகையில், உணவு பழக்கம் அடிப்படையில் கொரோனா பரவுகிறது என உலக சுகாதார நிறுவனம் கூறவில்லை.
மாறாக, பச்சையாக இறைச்சி உணவை உன்ன வேண்டாம், இறைச்சி உணவுகளை உண்ணும் மக்கள் சரியான முறையில் மற்றும் முழுமையாக சமைத்து இறைச்சியை உண்ண வேண்டும் என்ற அறிவுரையை உலக சுகாதார நிறுவனத்தின் இணையதளத்தில் வழங்கப்பட்டு உள்ளது.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவ இயக்குனர் ரந்தீப் குலேரியா, ” கொரோனா வைரஸ் நோய்த்தொற்று மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவுகிறது. அசைவ உணவுகள் அல்லது முட்டை எடுத்துக் கொள்வதால் நோய் பரவாது. பொதுவான சுகாதார எச்சரிக்கையின்படி, அனைத்து விதமான இறைச்சிகளை சரியாக சுத்தம் செய்து மற்றும் முழுமையாக சமைக்க வேண்டும் ” எனக் கூறியதாக மார்ச் 17-ம் தேதி வெளியான எகனாமிக்ஸ் டைம்ஸ் செய்தியில் வெளியாகி இருக்கிறது.