உபியில் நடுரோட்டில் பெண்கள் தாக்கப்படுவதாகப் பரவும் குடும்பத்தகராறு வீடியோ!

பரவிய செய்தி

அவசரத் தேவை, ஆயிரம் பெரியார்கள்…! ‘வதைக்கப்பட வேண்டியவள் பெண்’ என்கிறது பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ் கோட்பாடு. பெண்கள் மீதான வன்முறையும் ஒடுக்கப்பட்ட சாதியினர் மீதான வன்முறையும் சிறுபான்மையினர் மீதான வன்முறையும் வட இந்தியாவின் பல பகுதிகளில் அன்றாட நிகழ்வு ஆகிவிட்டது. பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ் பரப்பும் நச்சுக் கோட்பாடுகள் பரவிய பகுதிகளில் இதுபோன்ற மனச்சாட்சியற்ற தாக்குதல்கள் சர்வ சாதாரணக் காட்சிகள் ஆகிவிட்டன.

X Link | Archive Link

மதிப்பீடு

விளக்கம்

உத்தரப்பிரதேசத்தில் பெண்கள் நடுரோட்டில் தாக்கப்படுவதைப் பாருங்கள் என்று கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாப் பரவி வருகிறது. அந்த வீடியோவில் பெண்கள் இருவர், சில ஆண்களால் நடுரோட்டில் கற்களால் தாக்கப்படுவதை பார்க்க முடிகிறது.

மேலும் பரவி வரும் அப்பதிவுகளில், “உத்தரப்பிரதேசத்திற்கு ஆயிரம் பெரியார்கள் அவசரத் தேவை, பெண்கள் மீதான வன்முறையும், ஒடுக்கப்பட்ட சாதியினர் மீதான வன்முறையும், சிறுபான்மையினர் மீதான வன்முறையும் வட இந்தியாவின் பல பகுதிகளில் அன்றாட நிகழ்வு போல ஆகிவிட்டது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உண்மை என்ன?

பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இந்த வீடியோ கடந்த 2023 இல் இருந்தே சமூக ஊடகங்களில் பரவி வந்துள்ளது என்பதை அறிய முடிந்தது.

பரவி வரும் வீடியோ குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதில் அளித்துள்ள படாயுன் (Budaun) மாவட்ட காவல்துறையினர், “மஹாலோலி கிராமத்தில் இரு தரப்பினருக்கு இடையே நிலம் பகிர்ந்தளிப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டது, இதில் இருதரப்பினரும் காயமடைந்தனர். பில்சி காவல் நிலையத்தில் வந்த புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சம்பவத்தின் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். விசாரணை நடவடிக்கை நடைபெற்று வருகிறது” என்று குறிப்பிட்டுள்ளனர். 

இதே போன்று படாயுன் மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் இந்த சம்பவம் குறித்து கடந்த 2023 ஆகஸ்ட் 10 அன்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பெண்களை தாக்கிய முக்கிய குற்றவாளியின் பெயர் அரவிந்த். விசாரணையில் அவர் கீழே சாலையில் இருக்கும் தனது பெரியம்மாவைத் தான் தாக்கியுள்ளார் என்பது தெரிய வந்தது. இதற்கு முன்பு இவர்கள் அரவிந்தை தாக்கியுள்ளனர். இதன் காரணமாக அரவிந்துக்கு தலையில் தையல் போடப்பட்டுள்ளது. இது நிலத் தகராறு காரணமாக ஏற்பட்ட சண்டை. இதன் மூலம் இரு தரப்பினருமே பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சம்பந்தப்பட்ட அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த குடும்ப தகராறை, சமூக ஊடகங்களில் சிலர் தவறாகப் பரப்பி வருகின்றனர், அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

மேலும் படிக்க: கொடிவேரி அணை பூங்காவில் இரட்டை வசூலால் ஏற்பட்ட தகராறு எனப் பரப்பப்படும் 2020ல் எடுத்த வீடியோ !

மேலும் படிக்க: தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத் தலைவர் பெண் ஒருவரைத் தாக்குவதாகப் பரவும் தெலங்கானா வீடியோ !

முடிவு:

நம் தேடலில், உத்தரப்பிரதேசத்தில் பெண்கள் நடுரோட்டில் தாக்கப்படுவதாகப் பரவும் வீடியோ, குடும்பப் பிரச்சனையோடு தொடர்புடையது என்பதை உறுதிபடுத்த முடிகிறது.

Please complete the required fields.




Krishnaveni S

Krishnaveni, working as a Sub-Editor in You Turn. Completed her Master's in History from Madras University. Along with that, she holds a Bachelor’s degree in Electrical Engineering and also in Tamil Literature. She was a former employee of an IT Company and now she currently finds fake news on social media to verify factual accuracy.
Back to top button
loader