ஏமனில் சிறைபிடிக்கப்பட்ட இந்திய கப்பலில் பசுமாடுகள் எனப் பரவும் தவறான வீடியோ !

பரவிய செய்தி

ஏமன் நாட்டில் உள்ள ஹவுதிகள் இஸ்ரேல் கப்பல் என்று நினைத்து ஒரு கப்பலை சிறை பிடித்தார்கள். பிடித்த பிறகு தான் தெரிந்தது இது ஆயிரக்கணக்கான பசுமாடுகளை இறைச்சிக்காக ஏற்றி வந்த இந்திய கப்பல் என்று. இறைச்சிக்காக பசுமாடுகளை அந்நிய நாட்டிற்க்கு விற்று இருக்கிறார்கள் நம் தேச பக்தர்கள். 

X link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

மன் நாட்டிலுள்ள ஹவுதி அமைப்பினர் இஸ்ரேல் கப்பல் என்று நினைத்து கப்பல் ஒன்றினை சிறை பிடித்தனர். ஆனால், அது ஆயிரக்கணக்கான பசுமாடுகளை இறைச்சிக்காக ஏற்றி வந்த இந்தியக் கப்பல் என பிறகுதான் தெரிய வந்தது என வீடியோ ஒன்றினை திமுக கட்சியைச் சேர்ந்தவர்கள் உட்படப் பலரும் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். 

உண்மை என்ன ? 

இது குறித்த முக்கிய வார்த்தைகள் கொண்டு தேடியதில், இந்தியா நோக்கி வந்து கொண்டிருந்த இஸ்ரேல் பணக்காரர் ஒருவருக்குச் சொந்தமான கப்பலை ஏமனின் ஹவுத்தி (Houthi) கிளர்ச்சிப் படையினர் கைப்பற்றியது தொடர்பாக ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ தளத்தில் செய்தி வெளியாகியுள்ளது. 

இஸ்ரேலுடனான தொடர்பின் காரணத்தினாலேயே இக்கப்பலை சிறைபிடித்ததாகவும், காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்தும் வரை இஸ்ரேல் கப்பல்கள் மீது இது போன்ற கைப்பற்றல் தொடரும் என்றும் அவ்வமைப்பினரால் கூறப்பட்டுள்ளது.  

நவம்பர் 19ம் தேதி நடந்த இச்சம்பவம் குறித்து ‘தி இந்து’, ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’, ‘இந்தியா டுடே’ போன்ற ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால், அவை எதிலும் இந்தியாவில் இருந்து இறைச்சிக்காகப் பசு மாடுகள் ஏற்றுமதி செய்யப்பட்டதாகக் கூறப்படவில்லை. 

கப்பலில் மாடுகள் இருக்கும் வீடியோவின் கீஃப்ரேம்களை கொண்டு கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் மூலம் தேடியதில், இதே வீடியோ கடந்த நவம்பர் 17ம் தேதி யூடியூப் பக்கம் ஒன்றில் பதிவிடப்பட்டிருப்பதைக் காண முடிந்தது. ஆனால், ஹவுத்தி அமைப்பினர் நவம்பர் 19ம் தேதிதான் கப்பலைக் கைப்பற்றியுள்ளது. அதற்கு முன்னதாகவே அந்த வீடியோ இணையத்தில் உள்ளது.

மேலும், இந்தியாவில் இருந்து எருமை மாடுகள் தான் இறைச்சிக்காக ஏற்றுமதி செய்யப்படுகிறது. இது குறித்து விரிவான கட்டுரையினை இதற்கு முன்னர் யூடர்ன் வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க : இந்தியாவில் மாட்டிறைச்சி ஏற்றுமதி நிறுவனங்கள் அனைத்தும் இந்துக்களுக்கு சொந்தமானதா ?

இவற்றில் இருந்து ஹவுத்தி அமைப்பினர் இஸ்ரேல் கப்பலைக் கைப்பற்றிய செய்தியையும் மாடுகள் ஏற்றிச் செல்லும் ஒரு கப்பல் வீடியோவையும் சேர்த்து ஒரு தவறான செய்தியைப் பரப்புகின்றனர். 

முடிவு : 

நம் தேடலில், இந்தியாவில் இருந்து இறைச்சிக்காகப் பசு மாடுகள் ஏற்றுமதி செய்யப்பட்ட கப்பலை ஹவுத்தி அமைப்பினர் கைப்பற்றியதாகப் பரவும் வீடியோ குறித்த தகவல் உண்மை அல்ல. ஹவுத்தி அமைப்பினர் கைப்பற்றிய கப்பல் வேறு, மாடுகளை ஏற்றிச் செல்லும் கப்பல் வேறு என்பதை அறிய முடிகிறது. 

Please complete the required fields.




ஆதாரம்

Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader