This article is from Mar 09, 2021

இறுதி சடங்கில் சிரித்து பேசும் யோகி ஆதித்யநாத்.. இராணுவ வீரரின் இறுதி சடங்கா ?

பரவிய செய்தி

“நம் தேசத்திற்காக தன் இன்னுயிர் நீத்த ராணுவ வீரரின் உடலுருகே சிரித்து மகிழும் பாஜக தேச பக்தர்கள் யோகி & உபி பிஜேபி ஆர்எஸ்எஸ் தலைவர்கள்.” ” இவ்வளவு தாங்க இவங்களோட தேசபக்தி”

மதிப்பீடு

விளக்கம்

தேசத்திற்காக உயிர் நீத்த இராணுவ வீரரின் உடலுக்கு அருகே சிரித்து மகிழ்வதாக இந்திய தேசியக் கொடி போர்த்தப்பட்ட உடலுக்கு அருகே அமர்ந்து இருக்கும் உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பாஜகவினர் ஏதோ பேசி சிரித்துக் கொண்டிருக்கும் 16 நொடிகள் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

இதன் உண்மைத்தன்மை குறித்து கூறுமாறு ஃபாலோயர் தரப்பில் கேட்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து, சமூக வலைதளங்களில் தேடுகையில் கடந்த 2019-ம் ஆண்டில் இருந்தே இவ்வீடியோ பகிரப்பட்டு வந்துள்ளது. தற்போது தமிழக தேர்தல் சமயம் என்பதால் இவ்வீடியோவை மீண்டும் பகிர்ந்து வருவதை பார்க்க முடிகிறது.

Facebook link | Archive link

உண்மை என்ன ?

தேசியக் கொடி போர்த்தப்பட்ட உடலுக்கு அருகே யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பேசி சிரித்துக் கொண்டிருக்கும் காட்சி குறித்து தேடுகையில், 2018-ல் முன்னாள் உத்தரப் பிரதேச முதல்வர் இறுதி சடங்கின் போது யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பாஜகவினர் சிரித்து பேசிய சம்பவம் குறித்து நியூஸ் 18 மற்றும் டெக்கான் ஹெரால்டு உள்ளிட்ட செய்திகளில் வெளியாகி இருக்கிறது.

” உத்தரப் பிரதேச மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் முதல்வராக இருந்த என்.டி.திவாரி இறுதி சடங்கின் போது உத்தரப் பிரதேச முதல்வர், பீகார் கவர்னர் லால்ஜி தண்டொன் மற்றும் உ.பி அமைச்சர்கள் மொஹ்சின் ரசா, அஷுடோஷ் தண்டொன் பின்னால் இருந்து பேசி சிரித்த வீடியோ வைரலாகுவதாக 2018ம் ஆண்டு அக்டோபர் 21-ம் தேதி நியூஸ் 18 மற்றும் டெக்கான் ஹெரால்டு உள்ளிட்ட செய்திகளில் வெளியாகி இருக்கிறது.

Twitter archive link

இதற்கு காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சியை சேர்ந்தவர்களும் கூட கண்டனம் தெரிவித்து இருந்தனர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மறைந்த என்.டி.திவாரி உத்தரப் பிரதேச மாநிலத்தின் முதல்வராக 3 முறையும், 1 முறை உத்தரகாண்ட் முதல்வராகவும் இருந்துள்ளார்.

முடிவு : 

நம் தேடலில், உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், பாஜக அமைச்சர்கள் தேசியக் கொடி போர்த்தப்பட்ட உடலுக்கு அருகே சிரித்து பேசிக் கொண்டிருக்கும் காட்சி உண்மை, அது 2018-ல் எடுக்கப்பட்டது. ஆனால், உயிர் நீத்த ராணுவ வீரரின் உடலுக்கு அருகே அல்ல, இது அம்மாநில முன்னாள் முதல்வரின் இறுதி சடங்கின் போது நிகழ்ந்தது என நம்மால் அறியப்படுகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader