தங்கையை வன்புணர்வு செய்தவரின் தலையை வெட்டியதாக பரவும் செய்தி உண்மையா ?
பரவிய செய்தி
இவரின் தங்கை வன்புணர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, வன்கொடுமை செய்த நபரின் தலையை வெட்டியுள்ளார். வெட்டிய தலையுடன் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். இவர் சென்னையை சேர்ந்தவர்.
மதிப்பீடு
விளக்கம்
சென்னையைக் சேர்ந்த நபர் தனது தங்கையை பாலியல் வன்புணர்வு செய்தவரின் தலையை வெட்டி காவல் நிலையத்திற்கு சென்றாக கையில் தலையுடன் இருக்கும் நபரின் படம் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த சம்பவம் நிகழ்ந்தது சென்னையில் அல்ல. செப்டம்பர் 2018-ல் கர்நாடகாவின் மாண்டயா மாவட்டத்தில் உள்ள மலவல்லி காவல் நிலையத்திற்கு கையில் வெட்டப்பட்ட தலையுடன் ஒருவர் வந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
கையில் தலையுடன் வந்த நபரின் பெயர் பசுபதி. கொலை செய்யப்பட்டவரின் பெயர் கிரீஷ். 24 வயதான பசுபதியும், கிரீஷ் ஆகிய இருவரும் நல்ல நண்பர்களாக இருந்துள்ளனர். இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில் பசுபதியின் அம்மாவை கிரீஷ் திட்டிய காரணத்திற்காக உருவான சண்டையில் கிரீஷின் தலையை வெட்டியுள்ளார் பசுபதி.
இதையடுத்து, வெட்டிய தலை உடன் மலவல்லி காவல் நிலையத்திற்கு பசுபதி நடந்தே வந்துள்ளார். இது தொடர்பான செய்திகள் 2018 செப்டம்பரில் வெளியாகி உள்ளன. ஒரே மாதத்தில் கர்நாடகாவில் தலை வெட்டப்பட்ட சம்பவங்கள் மூன்று நடந்துள்ளன.
நண்பர்கள் இருவருக்குள் நடந்த சண்டையில் தலையை வெட்டி காவல் நிலையத்தில் சரணடைய வந்துள்ளார். அந்த புகைப்படத்தை வைத்து சென்னையில் தங்கையை பாலியல் வன்புணர்வு செய்தவரின் தலையை வெட்டியதாக தவறான செய்தியை பரப்பி வருகின்றனர்.