கோவில் சிலையை அவமதித்த இளைஞரின் புகைப்படம் எங்கு எடுக்கப்பட்டது ?
பரவிய செய்தி
இந்த பெரியார் கோஷ்டி திருடனை தமிழக காவல்த்துறை கைது செய்து இந்து கடவுளை அவமதித்த அவனுடைய காலை உடைக்க வேண்டும்.
மதிப்பீடு
விளக்கம்
கோவிலில் வழிபாடு செய்யப்படும் சிலையின் மீது செருப்பு உடன் காலினை வைத்திருக்கும் இளைஞர் பெரியார் கோஷ்டி என்றும், அவர் மீது தமிழக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முகநூல் பதிவு ஒன்றை காண நேரிட்டது. சம்பந்தப்பட்ட நபரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி தற்போது அந்த பதிவு முகநூல் குழுக்களில் அதிகம் பகிரப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த புகைப்படம் எங்கு எடுக்கப்பட்டது என அறிந்து கொள்ள ஆராய்ந்து பார்த்தோம்.
உண்மை என்ன ?
மேற்காணும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், கடந்த மே 11-ம் தேதி Neeraj Dwivedi TVM எனும் ட்விட்டர் பக்கத்தில், ” வாரணாசி பகுதியின் மிர்சாமுரத் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கர்தானா கிராமத்தைச் சேர்ந்த அசாத் கௌதம், ஆதம்பூர் கிராமத்தில் உள்ள திக் பாபா கோவிலில் தன் காலினை வைத்து புகைப்படம் எடுத்துள்ளான். பீம் ஆர்மியின் உறுப்பினர் எனக் கூறப்படும் அசாத் கௌதம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ” எனக் கூறி தமிழில் பகிரப்படும் புகைப்படமும் இணைக்கப்பட்டு உள்ளது.
वाराणसी के मिर्जामुराद थाना क्षेत्र के कर्धना गाँव का आजाद गौतम पुत्र लोधी गौतम अदमापुर गाँव में डीह बाबा के मंदिर के ऊपर पैर रख कर फोटो खींचा है उचित कार्यवाही करे आजाद गौतम अपने आप को भीम आर्मी का सदस्य भी बता रहा है @varanasipolice @Uppolice @IgRangeVaranasi @PrayagrajWale pic.twitter.com/BSCDkReNlC
— नीरज द्विवेदी TVM (@NEERAJD811) May 11, 2020
இதற்கு பதில் அளித்த வாரணாசி காவல்துறை, ” ஏப்ரல் 24-ம் தேதியே சம்பந்தப்பட்ட நபரின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்துள்ளதாக ” தெரிவித்து உள்ளனர்.
उक्त प्रकरण में आरोपी के विरुद्ध @varanasipolice द्वारा आवश्यक विधिक कार्यवाही करते हुए आरोपी को जेल भेजा जा चुका है। @IgRangeVaranasi @Uppolice
— ADG ZONE VARANASI (@adgzonevaranasi) May 11, 2020
மத உணர்வை புண்படுத்தியதாக கிராம மக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் வாரணாசியில் உள்ள கர்தானா கிராமத்தைச் சேர்ந்த அசாத் குமார் கௌதம் என்பவரை மிர்சாமுரத் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து உள்ளதாக அமர் உஜாலா எனும் இணைய செய்தியில் வெளியாகி உள்ளது.
இதற்கு முன்பாக, வாரணாசியில் உள்ள கிராமத்தில் கோவில் வழிபாட்டு சிலையின் மீது காலினை வைத்து எடுக்கப்பட்ட புகைப்படத்தில் இருப்பவர் முஸ்லீம் என வதந்திகளை பரப்பி இருந்தனர். அதுபோலவே, அதே புகைப்படத்தை தமிழகத்தில் நிகழ்ந்ததாக தவறான தகவலை பரப்பி வருகிறார்கள். புகைப்படத்தில் இருக்கும் நபரின் பெயர் அசாத் குமார் கௌதம், மத உணர்வை புண்படுத்திய அவரை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
முடிவு :
நம் தேடலில், இந்த பெரியார் கோஷ்டி திருடனை தமிழக காவல்துறை கைது செய்து இந்து கடவுளை அவமதித்த அவனுடைய காலை உடைக்க வேண்டும் எனக் கூறி பரவும் புகைப்படம் தமிழகத்தைச் சேர்ந்தது அல்ல என்பதையும், சம்பந்தட்ட நபர் கைது செய்யப்பட்டு உள்ளார் என்பதையும் அறிந்து கொள்ள முடிகிறது.