பெரியார் குறித்து அவதூறாக பேசிய சீதையின் மைந்தன் ழகரம் வாய்ஸ் உரிமையாளர் அல்ல !
பரவிய செய்தி
தந்தை பெரியார் குறித்து அவதூறு – யூடியூர் கைது ! சென்னையில் தந்தை பெரியார் குறித்து சமூக வலைத்தளங்களில் இழிவாக பேசியதாக எழுந்த புகாரில் ழகரம் வாய்ஸ் யூடியூப் சேனலை நடத்தி வந்த சீதையின் மைந்தன் என்கிற தட்சிணாமூர்த்தி கைது
மதிப்பீடு
விளக்கம்
சென்னையில் பெரியார் குறித்து சமூக வலைத்தளங்களில் இழிவாக பேசியதாக எழுந்த புகாரால் சீதையின் மைந்தன் என அழைக்கப்படும் தட்சிணாமூர்த்தி என்பவரை போலீசார் கைது செய்யப்பட்டதாக சன் நியூஸ் தமிழ் நியூஸ் கார்டு வெளியிட்டு இருக்கிறது. அதில், அவர் ழகரம் வாய்ஸ் யூடியூப் சேனலை நடத்தி வருவதாக குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
உண்மை என்ன ?
ழகரம் வாய்ஸ் யூடியூப் சேனலில் ” பெரியாரின் மர்ம மறுபக்கம் ” எனும் தலைப்பில் சீதையின் மைந்தன் சர்ச்சையாக பேசியதாக அக்டோபர் 9-ம் தேதி வீடியோ வெளியாகி இருந்தது. புகார்கள் எழுந்ததால் அந்த வீடியோ நீக்கப்பட்டு இருக்கிறது. எனினும் மற்றொரு சேனல் ஒன்றில் அவர் பேசிய அவ்வீடியோ பதிவாகி இருக்கிறது.
சீதையின் மைந்தன் என அழைக்கப்படும் தட்சிணாமூர்த்தி தமிழியப் பேரியக்கத்தின் நிறுவனத் தலைவர் ஆவார். அவ்வாறு அவரது பேட்டிகளில் இடம்பெற்றும் உள்ளது. ஆனால், அவர் ழகரம் வாய்ஸ் யூடியூப் சேனலை நடத்தி வருபவர் அல்ல.
இதுகுறித்து ழகரம் வாய்ஸ் சேனலின் நிறுவனத் தலைவர் பிரபாகரன் அவர்களிடம் தொடர்பு கொண்டு பேசுகையில், ” சீதையின் மைந்தன் ழகரம் வாய்ஸ் சேனலில் பேட்டி மட்டுமே அளித்தார். உரிமையாளரோ அல்லது சேனலை நடத்துபவரோ அல்ல ” என பதில் அளித்து இருந்தார்.
முடிவு :
நம் தேடலில், பெரியார் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு பேசியதாக எழுந்த புகாரில் கைது செய்யப்பட்ட சீதையின் மைந்தன் என்கிற தட்சிணாமூர்த்தி ழகரம் வாய்ஸ் யூடியூப் சேனலை நடத்துபவர் அல்ல, அந்த சேனலில் பேட்டி மட்டுமே அளித்து இருக்கிறார் என அறிய முடிகிறது.