கல்லூரி முதல் நாளில் பேருந்தில் மாணவர்களின் அட்டூழியங்கள் !
ஜூன் 17-ம் தேதி(திங்கள்) அன்று கோடை விடுமுறைக்கு பிறகு கல்லூரிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில், சென்னையில் அயனாவரம் மற்றும் ராயப்பேட்டை பகுதியில் அரசு பேருந்தில் பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் 20-க்கும் மேற்பட்டவர்கள் பேருந்தின் மேல் பகுதியில் அமர்ந்து கொண்டு கோஷங்களை எழுப்பிக் கொண்டு பயணித்துள்ளனர்.
இதில், 47A அயனாவரம் எம்டிசி பேருந்தில் பயணித்த பச்சையப்பா கல்லூரியின் மாணவர்கள் பலர் பேருந்தின் மீது அமர்ந்து கொண்டும், நின்று கொண்டும் பயணித்து உள்ளனர். பேருந்தை சுற்றி இருசக்கர வாகனத்திலும் பயணித்துள்ளனர்.
அப்பொழுது, பேருந்து திடீரென நிறுத்தப்பட்ட பொழுது மேலிருந்த பல மாணவர்கள் கீழே விழுந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவர்களின் இத்தகைய வரம்புமீறிய செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மேலும், மாணவர்கள் பேருந்தில் இருந்து விழும் காட்சிகள் ஃபேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே, கல்லூரி மாணவர்கள் பஸ் டே கொண்டாட சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து இருந்தாலும், கல்லூரி மாணவர்களின் செயல்கள் வரம்புமீறிய ஒன்றாக செல்கிறது.
அயனாவரத்தில் பேருந்தில் வரம்புமீறிய பச்சையப்பா மற்றும் அம்பேத்கார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த 13 மாணவர்களை காவல்துறை பிடித்து வைத்தனர். இதில், பெரும்பாலானோர் முன்னாள் மாணவர்கள் என்றும், பஸ் டே கொண்டாட இவ்வாறு நடந்து கொண்டதாக தெரிவித்தனர். ராயப்பேட்டையில், பேருந்தின் மேலே வரம்புமீறி நடந்து கொண்ட மாணவர்களையும் காவல்துறையினர் பிடித்துள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் பல இடங்களில் நடந்துள்ளன.
proof :
Chennai: More than 20 students held for creating ruckus on buses