This article is from Jun 03, 2019

ஆடிட்டர் குருமூர்த்தி ஆர்வமாய் பதிவிட்ட புரளிகளின் தொகுப்பு !

துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர் மற்றும் வலதுசாரி சித்தாந்தம் கொண்ட ஆடிட்டர் குருமூர்த்தி அவர்கள் தமிழக பிரச்சனைகள், மதம் சார்ந்த, கட்சி சார்ந்த பல கருத்துக்களை ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகிறார்.

இப்படி அவர் பதிவிடும் பதிவுகளில் பல பதிவுகளில் உண்மைத்தன்மை இல்லாமலும், தவறான தகவல்களின் அடிப்படையில் கருத்து தெரிவித்து இருப்பார். தவறான தகவல்களை பதிவிட்ட காரணத்தினால் பல பதிவுகளை தன் ட்விட்டர் பக்கத்தில் நீக்கவும் செய்துள்ளார்.

இத்தொகுப்பில் ஆடிட்டர் குருமூர்த்தி பதிவிட்ட வதந்தி செய்திகள் குறித்து நாம் வெளியிட்ட செய்திகளை ஒன்றன் பின் ஒன்றாக காண்போம்.

1. ராமேஸ்வரம் கோவில் 1212 தூண்கள் :

2018 ஜனவரி 22-ம் தேதி, ராமேஸ்வரக் கோவிலில் இருக்கும் 1212 தூண்கள் நேர்கோட்டில் கட்டப்பட்டு ஒரே புள்ளியில் சீராக இருப்பதாக மேற்கண்ட புகைப்படத்தினை தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். ஆனால், இப்படத்தில் இருக்கும் தூண்கள் மத்திய பிரதேசம், மந்து பகுதியில் உள்ள ஹோஷங் ஷா ( Hoshang Shah’s) கல்லறையில் அமைந்துள்ளன.

விரிவாக படிக்க : இராமேஸ்வரத்தில் 1212 தூண்கள் ஒரே நேர்க்கோட்டில் சீராக கட்டப்பட்ட ஆச்சரியம்!

பகிர்ந்த புகைப்படம் தவறான தகவல் என அறிந்த உடன் தன் ட்விட்டர் பக்கத்தில் இருந்து அப்பதிவை குருமூர்த்தி நீக்கி இருந்தார் (அவர் பதிவிட்ட ட்விட்கள் நீக்கப்பட்ட காரணத்தினால் அதனை காண முடியவில்லை).

2. ஹைட்ரோ கார்பன் திட்டம் :

நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்த மாறுபட்ட தகவல்களை ட்விட்டரில் ஆடிட்டர் குருமூர்த்தி பதிவிட்டு இருந்தார். நெடுவாசல் திட்டத்தை மத்திய பாஜக அரசு வாபஸ் பெற்றதாக தவறான தகவலை பதிவிட்டார்.

விரிவாக படிக்க : ஆடிட்டர் குருமூர்த்தியின் ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்த மாறுபட்ட கருத்துகள்!

மேலும், மீத்தேன் திட்டம் ஆபத்தான திட்டம் எனக் கூறி அதற்கு அனுமதி அளித்த காங்கிரஸ், திமுக கட்சிகளை விமர்சித்தவர், இறுதியில் மீத்தேன் திட்டமே ஆபத்தானது, ஹைட்ரோ கார்பன் ஆபத்தில்லை என்றும் பதிவிட்டு இருந்தார். ஆனால், இவ்விரு திட்டங்களையும் மக்கள் ஏற்க தயாராக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

3. ஸ்டெர்லைட் ஆலை அடிக்கல் நாட்டு விழா :

” ஸ்டெர்லைட் ஆலையை திறந்து வைத்த கருணாநிதி தமிழகம் சிறந்த தொழில்வளம் மிகுந்த மாநிலம் என்று பாராட்டினார். ஆனால், ஸ்டாலின் ஸ்டெர்லைட் ஆபத்து அதை மூட வேண்டும் என்று கூறுகிறார் ” என்று ஸ்டெர்லைட் ஆலையின் அடிக்கல் நாட்டு விழாவின் போது எடுக்கப்பட்ட படத்தை இணைத்து தன் ட்விட்டரில் பகிர்ந்து இருந்தார்.

விரிவாக படிக்க : ஸ்டெர்லைட் ஆலையை தொடங்கி வைத்தது கலைஞரா ?

ஜெயலலிதா நிற்கும் புகைப்படத்திற்கு பதிலாக கருணாநிதியின் புகைப்படத்தை போட்டோஷாப் செய்து சமூக வலைத்தளங்களில் பரப்பிய தவறான தகவலை தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். பின்னர், அப்பதிவை ட்விட்டர் பக்கத்தில் இருந்து நீக்கி விட்டார்.

4. சபரிமலை விவகாரம் :

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கலாம் என்ற தீர்ப்பிற்கு பிறகு கேரளாவில் பெய்த கனமழையால் வெள்ளம் உண்டாகியது. அச்சமயத்தில் பெண்களை அனுமதிக்கலாம் என்ற தீர்ப்பால் தான் சபரிமலை ஐயப்பன் கோவில் வெள்ளத்தில் மூழ்கியதாக வதந்திகள் பரவின.

விரிவாக படிக்க : சபரிமலை ஐயப்பன் கோவில் வெள்ளத்தில் மூழ்கியதா ?

ஆடிட்டர் குருமூர்த்தியும் மேற்கூறியது போன்று ஒருவரின் பதிவை மீண்டும் ட்வீட் செய்து, சபரிமலையின் இந்நிலைக்கும் வழக்கிற்கும் சம்பந்தம் உள்ளதா என்று ட்விட்டரில் பதிவிட்டு வீண் வதந்தியை பரப்பினார். ஆனால், வெள்ளத்தால் மூழ்கியது சபரிமலை கோவில் அல்ல, மலையின் அடிவாரத்தில் உள்ள பம்பை மணல்புரத்தில் உள்ள பி.சி ராமமூர்த்தி மண்டபம் என தெளிவுப்படுத்தி எழுதி இருந்தோம்.

5. ராகுல் காந்தி :

14 வயது குழந்தை ராகுல் காந்தியை கேள்வியால் திணறடித்தார் என ஒரு புரளி பரவ அதனை தினமலர் நாளிதழும் வெளியிட்டுள்ளது. அதனை, ஆடிட்டர் குருமூர்த்தியும் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.

விரிவாக படிக்க : ராகுல்காந்தியை சிறுமி திணறடித்ததாக புரளி ! வெளியிட்ட பிரபல பத்திரிகை.

பின் தவறான தகவல் என அறிந்த உடன் தன் ட்விட்டர் பக்கத்தில் இருந்து அதனை நீக்கி இருந்தார்.

6. அதிமுக வாக்குகள் :

சமீபத்தில் தமிழகத்தில் அதிமுக 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து உள்ளது, பாஜக போட்டியிட்ட தொகுதியில் 2 முதல் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலேயே தோல்வி அடைந்து உள்ளது. தமிழகத்தில் இருப்பது யாருக்கான எதிர்ப்பு அலை ? என ஆடிட்டர் குருமூர்த்தி ட்விட் செய்தார்.

விரிவாக படிக்க : அதிமுக 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றதாக குருமூர்த்தி ட்வீட்|உண்மை என்ன?

இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையத்தளத்தில் உள்ள தேர்தல் முடிவுகளில் ஆராய்ந்ததில் ஒரு தொகுதியில் கூட அதிமுக கட்சி 5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடையவில்லை. ஆடிட்டர் குருமூர்த்தியின் அதிமுக தொடர்பான ட்விட்டர் பதிவு செய்திகளிலும் வெளியாகி சிக்கிக் கொண்டார்.

Please complete the required fields.




Back to top button
loader