பாரிஸ் தேவாலயத்தில் கண்கவர் ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்படும் காட்சி எனப் பரவும் தவறான வீடியோ!

பரவிய செய்தி

பாரிஸ் தேவாலயத்தில் இருந்து கண்கவர் ஒலிம்பிக் ஜோதியை ஏற்றும் காட்சி..

X Link | Archive Link

மதிப்பீடு

விளக்கம்

ஒலிம்பிக் போட்டி, வரும் 26ஆம் தேதி பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரில் மிக பிரம்மாண்டமாக தொடங்கப்படவுள்ளது. ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடைபெறும் இந்த விளையாட்டு போட்டியில் இதுவரை இந்தியாவிலிருந்து 28 பேர் பங்கேற்கவுள்ளதாக இந்திய தடகளச் சங்கம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் பாரிஸ் தேவாலயத்திலிருந்து கண்கவர் ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்படும் காட்சி என்றுகூறி 25 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று வாட்சாப் உட்பட அனைத்து சமூக ஊடகப் பக்கங்களிலும் வைரலாகப் பரவி வருகிறது.

உண்மை என்ன?

பரவி வரும் செய்திகள் குறித்து தேடியதில், கீரீஸ் (Greece) நாட்டிலுள்ள ஒலிம்பியா நகரிலிருந்து தொடங்கிய ஒலிம்பிக் ஜோதி பயணம், தற்போது (ஜூலை 05) Seine-Maritime நகருக்கு வந்துள்ளது என்பதை அறியமுடிந்தது. மேலும் ஆய்வுசெய்ததில் பாரிஸ் நகருக்கு வருகின்ற ஜூலை 14 ஆம் தேதிதான் ஒலிம்பிக் ஜோதி வரவுள்ளது என்பதையும் அறியமுடிந்தது.

மேலும் பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வுசெய்ததில், பரவி வரும் வீடியோவின் முதல் பாதி Father V என்பவரது எக்ஸ் பக்கத்தில் ஏப்ரல் 10, 2023 அன்று “Florentine Easter Tradition” நிகழ்வு என்று குறிப்பிடப்பட்டு பதிவிடப்பட்டிருந்தது.

“Florentine Easter Tradition” நிகழ்வு குறித்து மேலும் தேடியதில், ToscanaTV யூடியூப் பக்கத்தில் இதன் முழு வீடியோ ஒளிபரப்பப்பட்டிருந்தது. சரியாக 1:01 வது நிமிடத்தில் பரவி வரும் வீடியோவில் உள்ள அதே காட்சிகள் இடம் பெற்றிருந்தன.

இதன்மூலம், இத்தாலியில் உள்ள புளோரன்ஸ் நகரில் உள்ள ஒரு சர்ச்சில் கொண்டாடப்பட்ட “Florentine Easter Tradition” நிகழ்விற்குரிய வீடியோ இது என்பதை அறியமுடிகிறது.

இதே போன்று, பரவி வரும் வீடியோவின் இரண்டாவது பாதி குறித்து தேடியதில், DMD என்ற யூடியூப் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்த ஜெர்மன் இசைக்குழு நிகழ்ச்சியின் வீடியோவோடு சரியாகப் பொருந்தின.

இதன்மூலம் இரண்டு வெவ்வேறு வீடியோக்களை எடிட் செய்து இணைத்து, பாரிஸ் தேவாலயத்திலிருந்து கண்கவர் ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்படும் காட்சி என்று கூறி பரவி வரும் வீடியோ சமூக ஊடகங்களில் தவறாகப் பரவி வந்துள்ளது என்பதை அறியமுடிகிறது.

முடிவு:

நம் தேடலில், பாரிஸ் தேவாலயத்திலிருந்து கண்கவர் ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்படும் காட்சி எனப் பரவி வரும் வீடியோ, பாரிஸில் எடுக்கப்பட்டதல்ல என்பதை அறியமுடிகிறது. இரண்டு வெவ்வேறு வீடியோக்கள் எடிட் செய்யப்பட்டு இவ்வாறு தவறாகப் பரப்பப்பட்டுள்ளன.

Please complete the required fields.




Krishnaveni S

Krishnaveni, working as a Sub-Editor in You Turn. Completed her Master's in History from Madras University. Along with that, she holds a Bachelor’s degree in Electrical Engineering and also in Tamil Literature. She was a former employee of an IT Company and now she currently finds fake news on social media to verify factual accuracy.
Back to top button
loader