‘நீட் தேர்வுத்தாள் கசிவில் தொடர்புடையவர்கள்’ என வகுப்புவாதத்தை தூண்டும் விதமாக வதந்தி பரப்பும் வலதுசாரிகள்!

பரவிய செய்தி

மேலே உள்ள புகைப்படங்களில் இருப்பவர்கள் நீட் நுழைவுத்தேர்வு வினாத்தாள் கசிவோடு தொடர்புடைய பயனாளிகள், அவர்கள் யார் மற்றும் எந்த மதத்தைச் சார்ந்தவர்கள் என்பதை சற்று பார்த்து யூகிக்கவும்? அனைவரும் முஸ்லிம்கள் மட்டுமே.

X Link | Archive Link

மதிப்பீடு

விளக்கம்

இளநிலை மருத்துவப் படிப்புக்கு, நடப்பு ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த மே 5ஆம் தேதி நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து ஜூன் 4ஆம் தேதி, நீட் தேர்வு முடிவுகள் வெளியாயின. இதனிடையே ஹரியானாவில் உள்ள ஒரு மையத்தில் மட்டும் 8 பேர் முதலிடம் பெற்றிருப்பதும், நிறைய மாணவர்கள் 718, 719 மதிப்பெண்கள் பெற்றிருப்பதும் விவாதத்தை எழுப்பியது. சிலருக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டதாகவும் சொல்லப்பட்டது.

இந்நிலையில் பிஹார் மாநிலம் பாட்னாவில் நீட் தேர்வுக்கு முன்னதாக வினாத்தாள் கசிந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம், மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கியது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் தொடர்பாக வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. இதுவரை நீட் முறைகேட்டில் தொடர்புடைய குஜராத், பிஹார், ஜார்க்கண்ட் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்த பல்வேறு நபர்களை சிபிஐ கைதுசெய்து விசாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மோசடி நடைபெற்ற நடப்பாண்டு நீட் நுழைவுத்தேர்வு வினாத்தாள் கசிவோடு தொடர்புடைய பயனாளிகள் இவர்கள்தான், இவர்களில் பெரும்பான்மையானவர்கள் முஸ்லிம்கள் என்றுகூறி, மலையாள செய்தித்தாளின் புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வலதுசாரிகளால் வைரலாகப் பரப்பப்பட்டு வருகிறது.

உண்மை என்ன?

பரவி வரும் செய்தித்தாள் குறித்து ஆய்வுசெய்து பார்த்ததில், மலையாளப் பத்திரிகையான மாத்ருபூமியில் வெளியிடப்பட்ட விளம்பரம் இது என்பதை அறியமுடிந்தது.

செய்தித்தாளை மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்ததில், “கோட்டக்கல்லில் அமைந்துள்ள யுனிவர்சல் இன்ஸ்டிடியூட், தனது வெள்ளிவிழா நாளில், நீட் தேர்வு முடிவுகளின் மூலம் கேரளாவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது” என்ற தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டிருப்பதைக் காணமுடிந்தது.

இதன்மூலம் கேரளாவின் கோட்டக்கல்லில் அமைந்துள்ள யுனிவர்சல் இன்ஸ்டிடியூட் என்ற நீட்தேர்வு பயிற்சி மையத்தில் வெற்றிபெற்று சிறந்த மதிப்பெண்களை பெற்ற மாணவர்களின் பட்டியல் இது என்பதை அறியமுடிகிறது.

எனவே இதுதொடர்பாக நமது யூடர்ன் தரப்பிலிருந்து, யுனிவர்சல் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தின் முதல்வர் ஹமீது அவர்களை தொடர்புகொண்டு பேசினோம். அப்போது பேசிய அவர், “சமூக ஊடகங்களில் இந்த செய்தித்தாள் தொடர்பாக பரவும் செய்தி தவறானது. இது எங்கள் யுனிவர்சல் இன்ஸ்டிடியூட் பயிற்சி மையத்தின் NEET 2024 தேர்வில் தேர்ச்சி பெற்று முதன்மையான மதிப்பெண்கள் மாணவர்களின் பட்டியல், வினாத்தாள் கசிவில் தொடர்புடைய பயனாளிகள் அல்ல. மேலும் எங்கள் கல்வி நிறுவனத்தில் முஸ்லிம் மதத்தினர் மட்டுமின்றி இந்து, கிறிஸ்தவம் என அனைத்து சமூக மாணவர்களும் உள்ளனர்” என்றும் தெரிவித்தார்.

இதன்மூலம் மலையாளப் பத்திரிகையான மாத்ருபூமியில், கேரளாவில் அமைந்துள்ள யுனிவர்சல் இன்ஸ்டிடியூட் என்ற நீட்த்தேர்வு பயிற்சி மையத்தில் வெற்றிபெற்று சிறந்த மதிப்பெண்களை பெற்ற மாணவர்கள் குறித்து வெளியிடப்பட்டுள்ள விளம்பரத்தை, நீட் வினாத்தாள் கசிவோடு தொடர்புடையவர்கள் என்று கூறி சிலர் வகுப்புவாதத்தைத் தூண்டும் விதமாக சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பது தெளிவாகிறது.

மேலும் படிக்க: நீட் தேர்வு மோசடியில் தொடர்புடையவர்கள் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் கைது எனப் பரவும் போலிச் செய்தி!

முடிவு:

நம் தேடலில், நீட் வினாத்தாள் கசிவோடு தொடர்புடையவர்களில் பெரும்பான்மையானவர்கள் முஸ்லிம்களே என்றுகூறி சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகள் முற்றிலும் தவறானவை என்பதை அறியமுடிகிறது.

Please complete the required fields.




Krishnaveni S

Krishnaveni, working as a Sub-Editor in You Turn. Completed her Master's in History from Madras University. Along with that, she holds a Bachelor’s degree in Electrical Engineering and also in Tamil Literature. She was a former employee of an IT Company and now she currently finds fake news on social media to verify factual accuracy.
Back to top button
loader