இந்தியாவில் ‘மாத்திரைகளில் இரும்பு ஆணிகளை வைத்து புதிய ஜிகாத்’ எனப் பரவும் பொய்!
![](https://youturn.in/wp-content/uploads/2024/07/tablets-alert-FC.jpg)
பரவிய செய்தி
விழுங்குவதற்கு முன் அனைத்து காப்ஸ்யூல்களையும் காந்தம் மூலம் சரிபார்க்க வேண்டும், ஒரு புதிய ஜிஹாத் எழுகிறது..
மதிப்பீடு
விளக்கம்
மாத்திரைகளில் இரும்பு ஆணிகளை வைத்து புதிய ஜிகாத் செய்யப்படுகிறது, விழுங்குவதற்கு முன் அனைத்து மாத்திரைகளையும் காந்தம் மூலம் சரிபார்க்க வேண்டும் என்று கூறி 35 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
பரவி வரும் வீடியோவில் “ESORAL” என்று எழுதப்பட்டுள்ள நீல நிற மாத்திரை பாக்கெட்டிலிருந்து ஒருவர், ஒரு மாத்திரையை எடுத்து பார்ப்பதையும், அதனுள் சிறிய இரும்பு ஆணிகள் இருப்பதையும் காணமுடிகிறது. இதே போன்று மற்றொரு மாத்திரை அட்டையிலிருந்தும் ஒரு மாத்திரையை எடுத்து பார்க்கப்படுகிறது, அதனுள்ளும் பல சிறிய இரும்பு ஆணிகள் இருப்பதை வீடியோவில் தெளிவாகக் காணமுடிகிறது.
All capsules must be checked with a magnet before swallowing, A new jihad is rising… ♂️
*விழுங்குவதற்கு முன் அனைத்து காப்ஸ்யூல்களையும் காந்தம் மூலம் சரிபார்க்க வேண்டும், ஒரு புதிய ஆட்கொல்லி எழுகிறது* … pic.twitter.com/BVV369ct2E
— Guruswamy V (@GuruswamyV89671) July 1, 2024
All capsules must be checked with a magnet before swallowing, A new jihad is rising… ♂️ pic.twitter.com/97TDAryvvJ
— SRIDHAR C R(Modi’s Family) (@sriip48) June 28, 2024
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வுசெய்து பார்த்ததில், இதே வீடியோ கடந்த 2021 ஆம் ஆண்டிலிருந்தே சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வந்துள்ளது என்பதை அறிய முடிகிறது.
பாகிஸ்தானை தளமாகக் கொண்டு இயங்கும் Spacial Health என்ற யூடியூப் பக்கத்தில், வீடியோ கடந்த 2022ஆம் ஆண்டில் பதிவிடப்பட்டிருந்தது. அதில், மாத்திரை அட்டையின் பின்புறம் ஆங்காங்கே உருது மொழியில் வார்த்தைகள் இடம் பெற்றிருந்தன.
மேலும் மாத்திரைகள் தயாரிக்கும் நிறுவனமான “City Pharmaceutical Laboratories” இன் லோகோவான “CP“-ம் அட்டையின் பின்புறம் இடம் பெற்றிருந்ததை தெளிவாகக் காணமுடிகிறது.
எனவே “City Pharmaceutical Laboratories” நிறுவனம் எங்கு அமைந்துள்ளது என்பது குறித்து ஆய்வு செய்தோம். பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் நிறுவனம் அமைந்துள்ளதை உறுதிசெய்ய முடிந்தது. மேலும் இதே மருந்தை வங்காளதேசத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் Eskayef Pharmaceuticals Ltd என்ற ஒரு மருந்து நிறுவனமும் தயாரிப்பதை அறிய முடிகிறது. ஆனால் பரவி வரும் வீடியோவில் பாகிஸ்தானில் இயங்கும் நிறுவனமான “City Pharmaceutical Laboratories” தயாரித்த மாத்திரைகளே காட்டப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், City Pharmaceutical Laboratories இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ESORAL 20 mg மற்றும் ESORAL 40 mg மாத்திரைகள் குறித்த விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதையும் காணமுடிகிறது.
இதன்மூலம் “ESORAL” மாத்திரைகள் இந்தியாவில் தயாரிக்கப்படுவதில்லை, பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் தயாரிக்கப்படுகின்றன என்பது தெளிவாகிறது.
மேலும் பரவி வரும் வீடியோவில் காணப்படும் மற்றுமொரு மாத்திரை குறித்தும் ஆய்வு செய்ததில், “FirstNigeriaTV” என்ற யூடியூப் பக்கத்தில் கடந்த 2021ஆம் ஆண்டிலிருந்தே பரவி வரும் வீடியோ பதிவிடப்பட்டிருந்ததைக் காண முடிந்தது. கூகுள் லென்ஸைப் பயன்படுத்தி பாக்கெட்டில் உள்ள எழுத்துகளை மொழிபெயர்த்ததில் “Enterofuril” என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தன.
“Enterofuril” மாத்திரைகளை தயாரிக்கும் நிறுவனம் குறித்தும் தேடியதில், போஸ்னியாவில் (Bosnia) அமைந்துள்ள Bosnalijek பகுதியில் அவை தயாரிக்கப்படுகின்றன என்பதை அறியமுடிந்தது.
மேலும் பரவி வரும் வீடியோவில் மாத்திரை அட்டையின் பின்புறமே காட்டப்படுகின்றன. முன்பக்கம் காட்டப்படவே இல்லை. மாத்திரை அட்டையின் முன்பக்கம் வழியாக துளையிடப்பட்டு, மாத்திரைகளை வெளியே எடுத்து, அதனுள் இரும்பு ஆணிகள் வைக்கப்பட்டிருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். எனவே மாத்திரையின் உள்ளே இரும்பு ஆணிகள் வைக்கப்பட்டுள்ளன என்று 2021 ஆம் ஆண்டிலிருந்து பரவி வரும் செய்திகள் ஆதாரப்பூர்வமற்றவை. ஜிகாத் என்ற பெயரில் முஸ்லிம்களுக்கு எதிராக ஏகப்பட்ட வெறுப்பு பிரச்சாரங்களும் பொய் செய்திகளும் பரப்பப்படுகின்றன, இம்மாதிரியாக பரப்பப்படும் பொய் செய்திகளை ஏற்கனவே ஆய்வுசெய்து அதன் உண்மைத்தன்மையை நாங்கள் எழுதியுள்ளோம்.
மேலும் படிக்க : இந்து பெண்ணின் இறந்த உடலை எடுத்துச் செல்லும் முஸ்லீம் காதலர் எனப் பரப்பப்படும் வதந்தி!
மேலும் படிக்க : இந்தியாவில் அதிகரிக்கும் முஸ்லீம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகள் – இந்தியா ஹேட் லேப் ஆய்வறிக்கை!
முடிவு:
நம் தேடலில், இந்தியாவில் மாத்திரைகளில் இரும்பு ஆணிகளை வைத்து புதிய ஜிகாத் செய்யப்படுவதாகப் பரவும் செய்திகள் தவறானவை என்பதை அறியமுடிகிறது. மேலும் அவை பாகிஸ்தான் மற்றும் போஸ்னியாவில் தயாரிக்கப்படும் மாத்திரைகளாகும். அவை இந்தியாவில் விற்பனைக்கு அல்ல. மேலும், பரவக்கூடிய வீடியோவில் மாத்திரை அட்டையின் ஒரு பக்கம் மட்டுமே காண்பிக்கபடுவதால், இதனை முற்றிலும் நம்பத்தகுந்த தகவலாக நாம் எடுத்துக்கொள்ள முடியாது என்பது தெளிவாகிறது.