மக்களவையில் அனுராக் தாக்கூர் கேட்ட கேள்விக்கு ராகுல் பதில் தெரியாமல் முழித்ததாகப் பரவும் பொய்!

பரவிய செய்தி

மரண பங்கமாக ராகுல் காந்தி கலாய்க்கப்பட்ட தருணம்! இந்த அவமானம் உனக்கு தேவையா? 

X link

மதிப்பீடு

விளக்கம்

மக்களவையில் குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் உரை பேசுபொருளானது. 

இந்நிலையில் ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் மக்களவையில் ராகுல் காந்தியை பார்த்து கேட்ட கேள்விக்கு அவரால் பதில்சொல்ல முடியவில்லை என வீடியோ ஒன்று பாஜகவினரால் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது. 

அதில், ’அரசியல் அமைப்பில் எத்தனை பக்கங்கள் இருக்கிறது. தினமும் அதனைத் தூக்கிக்கொண்டு வருகிறீர்கள். ஒருமுறையாவது திறந்து படியுங்கள்’ என அனுராக் தாக்கூர் கூறுவது போலவும் அதற்கு ராகுல் காந்தி பதில்சொல்ல முடியாமல் அமைதியாக இருப்பது போலவும் காண்பிக்கப்படுகிறது. 

உண்மை என்ன?

நாடாளுமன்ற நிகழ்வுகளை ஒளிபரப்பும் Sansad TV’ யூடியூப் பக்கத்தில் அனுராக் தாக்கூர் பேசிய முழு வீடியோ கடந்த 1ஆம் தேதி பதிவிடப்பட்டுள்ளது. அந்த முழு வீடியோவில் அரசியலமைப்பு பற்றி அவர் பேசிய பகுதி 56.44 நிமிடத்தில் இடம் பெற்றுள்ளது. 

அவர் பேசும்போது அவையில் உள்ள எதிர்க்கட்சியினர் வீடியோவில் காண்பிக்கப்படுகின்றனர். அப்போது ராகுல் காந்தி அவையில் இல்லை. 

மேலும் ராகுல் காந்தி பேசுகையில், சபாநாயகர் இருக்கையில் ‘ஓம் பிர்லா’ அமர்ந்திருந்தார். ஆனால், அனுராக் பேசுகையில் ‘திலிப் சைகியா’ சபாநாயகராக இருக்கையில் அமர்ந்திருந்தார். எனவே இவர்கள் இருவர் பேசியதும் வெவ்வேறு நேரத்தில் நிகழ்ந்தவை என்பதை அறியமுடிகிறது. 

பரவக்கூடிய வீடியோவில் ராகுல் காந்தி பதில் சொல்லாமல் அமைதியாக இருப்பது போன்று காட்டப்படும் காட்சிகள், ராகுல் காந்தியின் உரையின் போது எடுக்கப்பட்டவை. இதனை அனுராக்கின் வீடியோவுடன் சேர்த்து எடிட் செய்து தவறாகச் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது. 

முடிவு: 

அரசியலமைப்பு புத்தகத்தில் எத்தனை பக்கங்கள் உள்ளது என அனுராக் தாக்கூர் கேட்ட கேள்விக்கு ராகுல் காந்தி பதில் தெரியாமல் நின்றதாகப் பரவும் வீடியோ குறித்த தகவல் உண்மை அல்ல. அனுராக் அப்படிப் பேசும்போது ராகுல் காந்தி அவையில் இல்லை. பரவக் கூடிய வீடியோ இரண்டு வெவ்வேறு வீடியோக்களை வெட்டி ஒட்டி எடிட் செய்யப்பட்டது.

Please complete the required fields.




Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader