‘கங்கனா ரனாவத்தின் கன்னத்தில் அறைந்த சிஐஎஸ்எஃப் பெண் காவலர் பணியிட மாற்றம்’ என தவறாக செய்தி வெளியிட்ட ஊடகங்கள்!
![](https://youturn.in/wp-content/uploads/2024/07/kangana-ranaut-FC-1.jpg)
பரவிய செய்தி
நடிகை கங்கனா ரனாவத்தின் கன்னத்தில் அறைந்த சிஐஎஸ்எஃப் பெண் காவலர் குல்விந்தர் கவுர் பெங்களூருவுக்கு பணியிட மாற்றம்..
மதிப்பீடு
விளக்கம்
நடிகையும், பாஜக எம்.பி.யும் ஆன கங்கனா ரனாவத் கடந்த மாதம் சண்டிகர் விமான நிலையத்துக்கு சென்றிருந்தபோது, அவருக்கும் அங்கிருந்த சிஐஎஸ்எஃப் (CISF) பெண் காவலர் குல்விந்தர் கவுர் என்பவருக்கும் வாக்குவாதம் எழுந்த நிலையில், அந்த பெண் காவலர் கங்கனாவை கன்னத்தில் அறைந்த சம்பவம் நாடு முழுவதும் பேசுபொருளானது. விவசாயிகளின் போராட்டத்தை கங்கனா ரனாவத் அவமரியாதை செய்ததாலேயே அவ்வாறு தான் அறைந்ததாக அந்தப் பெண் காவலர் விசாரணையில் கூறியதாகவும் சொல்லப்பட்டது.
இந்நிலையில் கங்கனா ரனாவத்தின் கன்னத்தில் அறைந்த சிஐஎஸ்எஃப் பெண் காவலர் குல்விந்தர் கவுர் பெங்களூருவில் உள்ள சிஐஎஸ்எஃப் ரிசர்வ் பட்டாலியனுக்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்று கூறி புதியதலைமுறை, நியூஸ்7 தமிழ், தினமணி, ABP நாடு போன்ற ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனையடுத்து சமூக ஊடகங்களில் பலரும் இதனை தங்களது பக்கங்களில் வைரலாகப் பரப்பி வருவதையும் காணமுடிகிறது.
உண்மை என்ன?
பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வுசெய்து பார்த்ததில், கங்கனா ரனாவத்தை அறைந்த சிஐஎஸ்எஃப் (CISF) காவலர் குல்விந்தர் கவுர் பெங்களூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டதாகப் பரவும் செய்தி உண்மை அல்ல என்பதை அறியமுடிந்தது.
இதுகுறித்து ANI தனது எக்ஸ் பக்கத்தில், “பாஜக எம்பி கங்கனா ரணாவத்தை கன்னத்தில் அறைந்ததாகக் கூறப்படும் சிஐஎஸ்எஃப் காவலர் குல்விந்தர் கவுர் இன்னும் பணியிடை நீக்கத்தில்தான் உள்ளார். மேலும் அவர் மீதான துறைரீதியான விசாரணை இன்னும் நடந்து வருகிறது: சிஐஎஸ்எஃப்” என்று குறிப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது.
CISF constable Kulwinder Kaur, who allegedly slapped BJP MP Kangana Ranaut, is still suspended and a departmental inquiry against her is still on: CISF
— ANI (@ANI) July 3, 2024
இதன்மூலம் சிஐஎஸ்எஃப் பெண் காவலர் குல்விந்தர் கவுர் மீது இன்னும் விசாரணை நடைபெற்று வருவதை உறுதி செய்யமுடிகிறது.
இதற்கு முன்பும் சண்டிகரில் கன்னத்தில் அடி வாங்கிய நடிகை கங்கனா ரனாவத் எனக்கூறி தவறானப் புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியது. அப்போதே இதுகுறித்து நம் பக்கத்தில் கட்டுரை ஒன்று வெளியிட்டிருந்தோம்.
மேலும் படிக்க: கன்னத்தில் அடி வாங்கிய நடிகை கங்கனா ரனாவத் எனப் பரவும் தவறான புகைப்படம்!
முடிவு:
நம் தேடலில், ‘கங்கனா ரனாவத்தின் கன்னத்தில் அறைந்த சிஐஎஸ்எஃப் பெண் காவலர் பணியிட மாற்றம்’ என ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தி தவறானவை என்பதை அறியமுடிகிறது.