பழனி அடிவாரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்.. திமுக அரசே இடித்தது எனப் பரவும் பொய் செய்தி
![](https://youturn.in/wp-content/uploads/2024/07/PAZHANI-temple-FC.jpg)
பரவிய செய்தி
பழனி அடிவாரத்தில் உள்ள சித்தநாதன் விபூதி கடையை விடியா திமுக அரசால் அகற்றப்பட்டது. கேட்டால் ஆக்கிரமிப்பு என்று கதை சொல்லும்…
மதிப்பீடு
விளக்கம்
பழனி கோவில் அடிவாரத்தில் உள்ள சித்தநாதன் விபூதி கடையை தமிழ்நாடு அரசு (திமுக) இடித்ததாக சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்று பாஜகவினரால் பரப்பப்படுகிறது.
பழனியில் சித்தனாதன் விபூதிக் கடை அகற்றப் பட்டது
பழனி ஆண்டவர் கோவிலுக்கு போகிறவர்கள் தூங்கவும்@HRajaBJP pic.twitter.com/JYmsrm9cie
— Thangaraj(மோடி குடும்பம்) (@ithanagaraj) July 3, 2024
உண்மை என்ன?
பரவக்கூடிய தகவல் குறித்து இணையத்தில் தேடியதில், 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பழனி அடிவாரத்தில் உள்ள ஆக்கிரமிப்பு தொடர்பாகச் செய்தி ஒன்று தினத்தந்தி இணையதளத்தில் வெளியாகியுள்ளதை காணமுடிந்தது.
பழனி முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழாவையொட்டி (2022) திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்துள்ளார். மேலும் பாதயாத்திரை செல்லும் வழித்தடங்களையும் பார்வையிட்டார்.
பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ”பழனி கோவிலைச் சுற்றியுள்ள அடிவாரத்தில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளது. இதுதொடர்பாக வழக்கு தொடர்ந்து இருக்கிறோம். அந்த வழக்கைத் துரிதப்படுத்தி ஆக்கிரமிப்பை முழுமையாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்” என்றுள்ளார்.
இதன் தொடர்ச்சியாக ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. ஆனால், ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் இருந்ததையடுத்து, அதிகாரிகள் மீது ராதாகிருஷ்ணன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடர்ந்தார்.
இவ்வழக்கு கடந்த ஜூன் மாதம் 27ஆம் தேதி நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமாா், ஆா்.விஜயகுமாா் ஆகியோா் அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கின் முந்தைய விசாரணையின்போது பிறப்பிக்கப்பட்ட உத்தரவை நடைமுறைப்படுத்தியது தொடா்பாக, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் நேரில் விளக்கம் அளிக்க வேண்டுமென்று உத்தரவிட்டதுடன் அடுத்த விசாரணை ஜூலை 2ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கிடையில் ஆக்கிரமிப்புகள் அரசுத் தரப்பிலிருந்து அகற்றப்பட்டது. நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் இடிக்கப்பட்டதைத் தமிழ்நாடு அரசு இந்துக்களுக்கு எதிரான நடவடிக்கை எடுத்ததுபோல் தவறாகச் சித்தரித்து பாஜகவினர் பொய்ச் செய்தி பரப்புகின்றனர்.
முடிவு:
பழனி அடிவாரத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்தே தமிழ்நாடு அரசு அகற்றியுள்ளது.