தமிழ்நாடு பெண் எம்.பி.கள் நாடாளுமன்றத்தில் வடை சாப்பிடுவதாகப் பரவும் போலியான புகைப்படம்!
பரவிய செய்தி
விஷச்சாராய சாவுகளால் தமிழக பெண்களின் தாலி அறுபடுவதை, அலட்சியம் செய்துவிட்டு தில்லியில் கூத்தடிக்கும் விடியல் போராளிகள்..!
மதிப்பீடு
விளக்கம்
18வது மக்களவைக் கூட்டத்தொடர் கடந்த 24-ம் தேதி தொடங்கிய நிலையில், புதிய உறுப்பினர்களுக்கு, தற்காலிக மக்களவைத் தலைவர் பர்த்ருஹரி மஹதாப் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இந்நிலையில் தமிழ்நாடு பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களான கனிமொழி கருணாநிதி, ஜோதிமணி, தமிழச்சி தங்கப்பாண்டியன் ஆகியோருடன் சில வடமாநில பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சேர்ந்து அமர்ந்திருப்பது போலவும், அவர்களுக்கு முன் உள்ள மேஜையில் வடைகள் இருப்பது போலவும் புகைப்படம் ஒன்றை சிலர் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரப்பி வருகின்றனர்.
உண்மை என்ன?
பரவி வரும் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வுசெய்து பார்த்ததில், இதே புகைப்படம் Times of India ஊடகத்தில் “‘போராளிகள் திரும்பிவிட்டார்கள்…’: நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முதல் நாள் மஹுவா மொய்த்ராவின் பதிவு” என்று குறிப்பிடப்பட்டு, ஜூன் 24 அன்று செய்தியாக வெளியிடப்பட்டிருந்தது.
ஆனால் இதில் பரவி வரும் புகைப்படத்தில் இருப்பது போன்று மேஜை மீது வாழை இலையில் வடை, சட்னி எதுவும் இல்லை.
மேலும் இதுகுறித்து கரூர் எம்பி ஜோதிமணியின் எக்ஸ் பக்கத்தையும் ஆய்வுசெய்து பார்த்தோம். அதிலும் “போராளிகள் திரும்பிவிட்டார்கள், 2024 vs 2019” என்று குறிப்பிட்டு ஜோதிமணி இரண்டு புகைப்படங்களை பதிவுசெய்திருந்தார். அதில் உண்மையான புகைப்படம் இடம்பெற்றிருந்ததைக் காணமுடிந்தது.
The warriors are back!
2024 vs 2019 @KanimozhiDMK @ThamizhachiTh @supriya_sule @MahuaMoitra @dimpleyadav pic.twitter.com/Ja7VYXMx5x— Jothimani (@jothims) June 24, 2024
இதன்மூலம் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை சிலர் எடிட் செய்து தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பதை அறியமுடிகிறது.
முடிவு:
நம் தேடலில், தமிழ்நாடு பெண் எம்.பி.கள் நாடாளுமன்றத்தில் மற்ற பெண் எம்.பி.களுடன் அமர்ந்து வடை சாப்பிடுவதாகப் பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பதை அறியமுடிகிறது.