உ.பி.யில் வயதான முதியவரை காவலர் தாக்கும் காட்சி எனப் பரவும் மத்தியப்பிரதேச வீடியோ!
![](https://youturn.in/wp-content/uploads/2024/06/police-beating-old-man-tam-FC.jpg)
பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் முதியவர் ஒருவர் காவலரால் கொடூரமாக தாக்கப்படும் காட்சி என்றுகூறி 28 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
பரவி வரும் வீடியோவில், காவலர் ஒருவர் ரயில் நிலையத்துக்குள் முதியவர் ஒருவரை சரமாரியாக தாக்குவதையும், சுற்றி உள்ளவர்கள் இந்த சம்பவத்தை வேடிக்கை பார்ப்பதையும் தெளிவாகக் காணமுடிகிறது.
Uttar Pradesh is heading towards a Jungle Raaj.
Just look at how the Police is beating the old Man mercilessly.
Mob lynching, Bulldozer on Homes of Innocent Muslims is common in UP now.
— Dhruv Rathee (Parody) (@dhruvrahtee) June 23, 2024
உத்திர பிரதேசத்தில் வயதான முதியவரை கடுமையாக தாக்கும் குரங்கு குப்பன் யோகியின் போலீஸ்… pic.twitter.com/EoGuP5PaLB
— ❤️. . . (@ASHOK_7007) June 24, 2024
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வுசெய்து பார்த்ததில் இது 2022ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்பதை அறியமுடிந்தது.
IBC24 என்ற யூடியூப் பக்கத்தில், July 29, 2022 அன்றிலிருந்து பரவி வரும் இந்த வீடியோ “ஜபல்பூர் ரயில் நிலையத்தில் முதியவரை கொடூரமாக தாக்கிய போலீஸ்காரர். ரயில் தண்டவாளத்திலும் அவர் தொங்குவதைப் பாருங்கள்” என்று குறிப்பிட்டு பதிவிடப்பட்டிருந்தது.
இதே போன்று CNN-News18 யூடியூப் பக்கத்திலும் பரவி வரும் வீடியோ குறித்து, “மத்தியப் பிரதேசத்தில் அமைந்துள்ள ஜபல்பூரில் முதியவரை தாக்கியபோது கேமராவில் சிக்கிய போலீஸ் கான்ஸ்டபிள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.” என்று குறிப்பிட்டு செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
மேலும் வீடியோவின் விளக்கத்தில், “ஜபல்பூர் ரயில் நிலையத்தில் முதியவரை கொடூரமாக தாக்கியதில் தொடர்புடைய போலீஸ் கான்ஸ்டபிள் இடைநீக்கம் செய்யப்பட்டதாக ரேவாவைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார். போலீஸ்காரர் முதியவர் ஒருவரை இரக்கமின்றி அடித்து இழுத்துச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. போலீஸ் கான்ஸ்டபிள் பெயர் ஆனந்த் சர்மா என்றும், தாக்கப்பட்டவரின் பெயர் கோபால் பிரசாத் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனது” என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதன்மூலம் மத்தியப் பிரதேசத்தில் கடந்த 2022ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட பழைய வீடியோவை, உத்தரப் பிரதேசத்தில் தற்போது எடுக்கப்பட்ட வீடியோ என்றுகூறி சமூக ஊடகங்களில் சிலர் தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பதை அறியமுடிகிறது.
மேலும் படிக்க: உ.பியில் இளைஞர் கையில் துப்பாக்கியைக் கொடுத்து கைது செய்யும் காவல்துறையினர் எனப் பரவும் தவறான செய்தி !
மேலும் படிக்க: உபியில் நடுரோட்டில் பெண்கள் தாக்கப்படுவதாகப் பரவும் குடும்பத்தகராறு வீடியோ!
முடிவு:
நம் தேடலில், உ.பி.யில் வயதான முதியவரை காவலர் கொடூரமாக தாக்கும் காட்சி எனப் பரவும் வீடியோ, மத்தியப்பிரதேசத்தில் அமைந்துள்ள ஜபல்பூர் ரயில் நிலையத்தில் கடந்த 2022ஆம் ஆண்டில் எடுக்கப்பட்டது என்பதை அறியமுடிகிறது.