இந்துக்கள் அனைவரும் வன்முறையாளர்கள் என்றாரா ராகுல்காந்தி? ராகுலின் உரை மீதான பாஜகவினரின் அவதூறுகள்!

பரவிய செய்தி

ஹிந்துக்கள் அனைவரும், பொய் சொல்லும், வன்முறை செய்யும், வெறுப்புணர்வு கொண்டவர்கள் – ஸ்டாலின் நண்பன் ராகுல்காந்தி மதவெறி பேச்சு

X Link | Archive Link

மதிப்பீடு

விளக்கம்

நாடாளுமன்ற மக்களவையில் பேசிய குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றிதெரிவிக்கும் தீர்மானம் மீது நேற்று விவாதம் நடைபெற்றது. அப்போது எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி பாஜகவை விமர்சித்து நீட் தேர்வு, மணிப்பூர் கலவரம் மற்றும் பல விவகாரங்கள் தொடர்பாக உரை நிகழ்த்தினார்.

இந்நிலையில், ‘இந்துக்கள் அனைவரும் பொய் சொல்லும், வன்முறை செய்யும், வெறுப்புணர்வு கொண்டவர்கள்’ என ராகுல்காந்தி சொன்னதாகக் கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இதனை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உட்பட பாஜகவினர் பலரும் தங்களது சமூக ஊடகப் பக்கங்களில் வைரலாகப் பரப்பி வருகின்றனர்.

உண்மை என்ன?

பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வுசெய்து பார்த்ததில், இதுகுறித்து கேரளா காங்கிரஸ் தனது எக்ஸ் பக்கத்தில் “பிரதமர் மோடி ராகுல் காந்தியின் வார்த்தைகளைத் திரிக்கப் பார்க்கிறார், ஆனால் ராகுல்ஜி அவருக்கு பொருத்தமான பதிலைக் கொடுத்துவிட்டார்” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தது.

அதில் பிரதமர் மோடி “ஒட்டுமொத்த இந்து சமூகத்தையும் வன்முறையாளர்கள் என்று அழைப்பது மிகவும் பிரச்சனைக்குரிய விஷயம்” என்று ராகுல்காந்தி பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசுகிறார். அதற்கு பதிலளித்து பேசும் ராகுல்காந்தி,இல்லை, இல்லை, இல்லை, நரேந்திர மோடி ஒட்டுமொத்த இந்துக்களின் பிரதிநிதி அல்ல. பாஜக ஒட்டுமொத்த இந்துக்களின் பிரதிநிதி அல்ல. ஆர்எஸ்எஸ் ஒட்டுமொத்த இந்துக்களின் பிரதிநிதி அல்ல” என்று கூறுவதைக் காணமுடிகிறது. 

எனவே இதுதொடர்பாக மேலும் தேடியதில், ராகுல்காந்தி இதுகுறித்து பேசியது தொடர்பான முழு வீடியோவை “சன்சாத் டிவி” வெளியிட்டிருந்தது.

அதில், “கடவுள் சிவபெருமான் யாருக்கும் பயப்படவேண்டாம் என்று கூறுகிறார். அபய முத்திராவையும் தன் கைகளில் காட்டுகிறார். அவர் அகிம்சையின் வடிவமாக உள்ளார். அதனால்தான் திரிசூலத்தை பூமியிலும் புதைக்கிறார். அதே நேரம் தங்களை இந்துக்கள் என அழைத்துக் கொள்பவர்கள் (பாஜகவினர்) 24X7 மணிநேரமும் வன்முறை, வெறுப்பு மற்றும் பொய் புரட்டுகளையே பரப்பி வருகின்றனர், அப்படிப்பட்ட நீங்கள் (பாஜகவினர்) இந்துக்களாகவே இருக்க முடியாது” என்று ராகுல்காந்தி எதிரே அமர்ந்துள்ள பாஜகவினரை பார்த்து கையசைத்து பேசியிருப்பதை தெளிவாகக் காணமுடிகிறது.

மேலும் இதுகுறித்து “ஒட்டுமொத்த இந்து சமூகத்தையும் வன்முறையாளர்கள் என்று அழைப்பது மிகவும் பிரச்னைக்குரிய விஷயம்” என்று பிரதமர் மோடி எழுந்து பேசியதற்கும், “நரேந்திர மோடி, பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் ஒட்டுமொத்த இந்துக்களின் பிரதிநிதி அல்ல என்று ராகுல்காந்தி பதிலளித்திருப்பதைக் காணமுடிகிறது.

 

ஆனால் ராகுல்காந்தி ஒட்டுமொத்த இந்துக்களையும் தவறாக சித்தரித்து பேசியதாகக் கூறி பிரதமர் நரேந்திரமோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அண்ணாமலை உட்பட பாஜகவினர் பலரும் சமூக ஊடகங்களில் ராகுல்காந்தியின் உரையை தவறாகத் திரித்து பரப்பி வருகின்றனர்.

மேலும் படிக்க: ராகுல் காந்தியின் வீடியோவின் வியூஸ் அதிகரிக்கக் காங்கிரஸ் செய்யும் செயல் எனப் பரவும் பொய்!

முடிவு:

நம் தேடலில், இந்துக்கள் அனைவரும் வன்முறையாளர்கள் என ராகுல்காந்தி கூறியதாகப் பரவி வரும் செய்திகள் தவறானவை என்பதை அறியமுடிகிறது.

Please complete the required fields.




Krishnaveni S

Krishnaveni, working as a Sub-Editor in You Turn. Completed her Master's in History from Madras University. Along with that, she holds a Bachelor’s degree in Electrical Engineering and also in Tamil Literature. She was a former employee of an IT Company and now she currently finds fake news on social media to verify factual accuracy.
Back to top button
loader