ராமர் கோயில் திறப்புக்குப் பிறகு வன்முறைகள் அதிகரித்துள்ளது என மதுரை ஆதீனம் கூறியதாகப் பரவும் போலி நியூஸ் கார்டு!
![](https://youturn.in/wp-content/uploads/2024/03/aadhinan-fact-check.jpg)
பரவிய செய்தி
ராமர் கோயில் – மதுரை ஆதீனம் வேதனை! ராமர் கோயில் திறப்பிற்குப் பின் தான் நாட்டில் ரயில் விபத்துகள்; சிறுமிகள் வன்கொடுமை என கொடும் நிகழ்வுகள் அதிகம் நடக்கின்றன – மதுரை ஆதீனம் வேதனை
மதிப்பீடு
விளக்கம்
உத்தரப் பிரதேசம் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோயில் கட்டப்பட்டது. அதனைக் கடந்த ஜனவரி 22ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
இந்நிலையில் ராமர் கோயில் திறந்த பிறகுதான் நாட்டில் இரயில் விபத்துக்கள், சிறுமிகள் மீதான வன்கொடுமைகள் அதிகரித்துவிட்டதாக மதுரை ஆதீனம் கூறியதாக புதிய தலைமுறை பெயரில் நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன?
பரவக் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டில் ‘06.03.2024’ என்ற தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. அதனைக் கொண்டு அவர்களது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கங்களில் இப்படி ஏதேனும் செய்தி வெளியிடப்பட்டுள்ளதா எனத் தேடினோம். அப்படி எந்த நியூஸ் கார்டும் அவர்களது பக்கத்தில் இல்லை.
மேற்கொண்டு மதுரை ஆதீனம் இப்படி கருத்து தெரிவித்தது தொடர்பாக வேறு ஏதேனும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதா எனத் தேடியதிலும் அப்படி எந்த செய்தியும் இல்லை.
ராமர் கோயில் திறப்பதற்கு முன்னதாக மதுரை ஆதீனம் பேசிய வீடியோ ஒன்று கடந்த ஜனவரி 1ம் தேதி ‘Asianet News Tamil’ யூடியூப் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
அதில், ’நரேந்திர மோடி சாதாரண குடும்பத்தில் பிறந்து கஷ்டப்பட்டு பிரதமராக வந்துள்ளார். அவரது நாற்காலியைப் பறிக்க முயற்சிகள் நடக்கிறது. யாராலும் முடியவில்லை. இன்று அவரால்தான் ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடக்க வேண்டும் என்று இருந்துள்ளது’ என மோடியைப் பற்றியும் ராமர் கோயில் திறப்பு பற்றியும் பெருமையாகச் சிலாகித்துப் பேசியுள்ளார்.
இவற்றிலிருந்து மதுரை ஆதீனம் கூறியதாக புதிய தலைமுறை பெயரில் பரவும் நியூஸ் கார்டு போலியாக உருவாக்கப்பட்டது என்பதை உறுதி செய்ய முடிகிறது.
முடிவு :
ராமர் கோயில் திறப்பிற்குப் பிறகு நாட்டில் இரயில் விபத்துக்களும் சிறுமிகள் மீதான வன்கொடுமைகளும் அதிகரித்துவிட்டதாக மதுரை ஆதீனம் கூறியதாக புதிய தலைமுறை பெயரில் நியூஸ் கார்டு போலியாக உருவாக்கப்பட்டது. ஆதீனம் அப்படி எந்த கருத்தையும் கூறவில்லை. புதிய தலைமுறையும் அப்படி நியூஸ் கார்டு வெளியிடவில்லை.