அயோத்தி ராமர் கோயில் உண்டியலில் பணம் போடும் வீடியோ எனப் பரப்பப்படும் ராஜஸ்தான் கோயில்!
![](https://youturn.in/wp-content/uploads/2024/02/Ayodhya-Ram-Temple_fact-check.jpg)
பரவிய செய்தி
அயோத்தி ராமர் கோயிலில் கடந்த 10 நாட்களில் சுமார் 12 கோடி ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக வழங்கி இருக்கிறார்கள்.. இந்தம்மாவே பல லட்சத்தை அளித்து இருப்பார்கள்..
மதிப்பீடு
விளக்கம்
ஜனவரி 22ம் தேதி அயோத்தியில் திறக்கப்பட்ட ராமர் கோயிலில் கடந்த 10 நாட்களில் சுமார் 12 கோடி ரூபாய் காணிக்கையாக வந்துள்ளது என வீடியோ ஒன்று பரப்பப்படுகிறது. அந்த வீடியோவில் பெண்மணி ஒருவர் கட்டுக் கட்டாகப் பணத்தை உண்டியலில் போடுகிறார்.
உண்மை என்ன?
பரவக் கூடிய வீடியோ கீஃப்ரேம்களை கொண்டு இணையத்தில் தேடியதில், அந்த வீடியோ ராமர் கோயில் திறப்பதற்கு முன்பிருந்தே சமூக வலைத்தளங்களில் இருப்பதைக் காண முடிந்தது.
பெண்மணி ஒருவர் கட்டுக் கட்டாகப் பணத்தை உண்டியலில் போடுகின்ற வீடியோ 2023, செப்டம்பர் மாதம் இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் பக்கங்களில் பதிவிடப்பட்டுள்ளது. இந்தியில் உள்ள அத்தலைப்பினை மொழிபெயர்த்ததில் ‘சன்வாலியா சேத் கோயில்’ என இருப்பதைக் காண முடிந்தது.
சன்வாலியா சேத் கோயில் ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கார் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோயிலாகும். மேலும் அயோத்தி ராமர் கோயில் ஜனவரி 22ம் தேதிதான் திறக்கப்பட்டது. அதற்கு முன்பிருந்தே தற்போது பரவக் கூடிய வீடியோ இணையத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இவற்றில் இருந்து ராஜஸ்தானில் உள்ள ஒரு கோயிலில் எடுக்கப்பட்ட வீடியோவைத்தான் ராமர் கோயில் எனத் தவறாகப் பரப்புகின்றனர் என்பதை அறிய முடிகிறது.
அயோத்தி ராமர் கோயில் காணிக்கை தொடர்பாக ஏதேனும் அதிகாரப் பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளதா எனத் தேடினோம். பிப்ரவரி 2ம் தேதி நிலவரப்படி 11 நாட்களில் ரொக்கம், ஆன்லைன் மற்றும் காசோலை வாயிலாக ரூ.11.5 கோடி காணிக்கையாக வந்துள்ளது என ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை அலுவலக பொறுப்பாளர் பிரகாஷ் குப்தா கூறியது ஊடகங்களில் செய்தியாக வெளியாகியுள்ளது. ஆனால், பரவக் கூடிய வீடியோவிற்கும் இந்த செய்திக்கும் எந்தவித தொடர்பும் இல்லை.
மேலும் படிக்க : அயோத்தி ராமர் கோவிலின் ஒரு நாள் உண்டியல் பணம் எனப் பரப்பப்படும் ராஜஸ்தான் கோவில் வீடியோ!
இதற்கு முன்னர் ராமர் கோயில் உண்டியலில் சேர்ந்த காணிக்கையை எண்ணும் வீடியோ என சன்வாலியா சேத் கோயில் உண்டியல் வீடியோ பரப்பப்பட்டது. அது பற்றிய உண்மையும் யூடர்னில் செய்தியாக வெளியிடப்பட்டுள்ளது.
முடிவு :
நம் தேடலில், ராமர் கோயில் உண்டியலில் பெண்மணி ஒருவர் காணிக்கை செலுத்துகிறார் எனப் பரவக் கூடிய வீடியோ குறித்த தகவல் உண்மை அல்ல. அது ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோயில் ஒன்றில் செலுத்தப்பட்ட காணிக்கை என்பதை அறிய முடிகிறது.