போதை மனிதனின் அடிப்படை உரிமையென இயக்குநர் வெற்றிமாறன் பேசியதாகப் பரப்பப்படும் பொய் செய்தி!
பரவிய செய்தி
“போதை மனிதனின் அடிப்படை உரிமைகளில் ஒன்று”! – வெற்றிமாறன்
மதிப்பீடு
விளக்கம்
இயக்குநர் வெற்றிமாறன் போதை என்பது மனிதனின் அடிப்படை உரிமைகளில் ஒன்று எனக் கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது.
~ போதை மனிதனின் அடிப்படை உரிமைகளில் ஒன்று வெற்றிமாறன்
~ தமிழ் சினிமாவ மொத்தமா NCB கஸ்டடி எடுத்தாதான் தமிழ்நாட்ட காப்பாத்த முடியும் போல pic.twitter.com/B373MSIY7d
— பகுத்தறிவுசித்தர் 3.0 (@Rajucute_7) May 1, 2024
உண்மை என்ன?
இயக்குநர் வெற்றிமாறன் கூறியதாகப் பரவும் படத்தில் ‘Tamil The Hindu’ என்கிற பெயர் இருப்பதைக் காண முடிகிறது.
இதனைக் கொண்டு இந்து தமிழ் திசையின் அதிகாரப் பூர்வ சமூக வலைத்தள பக்கங்களில் தேடினோம். கடந்த பிப்ரவரி 26ம் தேதி ‘இறைச்சி… இன்று அடிப்படை உரிமைகளில் ஒன்று! – வெற்றிமாறன்’ என்கிற தலைப்பில் செய்தி வெளியாகி இருந்ததைக் காண முடிந்தது.
உணவக திறப்பு விழாவில் பேசிய வெற்றிமாறன், ‘மனிதனின் வளர்ச்சியில் இன்றியமையாதது இறைச்சி என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இறைச்சி உணவு என்பது மனிதனின் அடிப்படை தேவைகளில் ஒன்று. ஆனால், இன்றைக்கு அடிப்படை உரிமைகளில் ஒன்றாக மாறிவிட்டது’ எனக் கூறியதாக அச்செய்தியில் உள்ளது.
மேற்கொண்டு அந்நிகழ்ச்சி குறித்துத் தேடியதில், ‘உப்புக்கண்டம் மெஸ்’ என்னும் கடை திறப்பு விழாவில் வெற்றிமாறன் பேசிய வீடியோ ‘Bingoo Box’ என்னும் யூடியூப் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதிலும் இறைச்சி குறித்து அவர் பேசியுள்ளதைக் காண முடிகிறது.
அந்நிகழ்ச்சியில் எந்த ஒரு இடத்திலும் போதை மனிதனின் அடிப்படை உரிமை என அவர் பேசவில்லை. இந்து தமிழில் வெளியான செய்தியில் உள்ள ‘இறைச்சி’ என்பதை ‘போதை’ என எடிட் செய்து தவறாகப் பரப்புகின்றனர்.
முடிவு :
போதை என்பது மனிதனின் அடிப்படை உரிமைகளில் ஒன்று என இயக்குநர் வெற்றிமாறன் பேசியதாகப் பரவும் தகவல் உண்மை அல்ல. அவர் இறைச்சி மனிதனின் அடிப்படைத் தேவைகளில் ஒன்று என்பது அடிப்படை உரிமைகளில் ஒன்றாக இன்றைக்கு மாறிவிட்டது எனப் பேசியதை எடிட் செய்து தவறாகப் பரப்புகின்றனர்.